Header Ads



மைத்திரியின் உத்தரவு மீறப்பட்டது, அடுத்து என்ன..? அரசியல் வட்டாரங்களில் ஆர்வம்


சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தடையையும் மீறி, மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களும், நேற்று கூட்டு எதிரணி கிருலப்பனையில் நடத்திய மேநாள் பேரணியில் கலந்து கொண்டனர்.

கிருலப்பனை சாலிகா மைதானத்தில் ஆரம்பித்து, லலித் அத்துலத் முதலி மைதானத்தில் வரை நடத்தப்பட்ட பேரணியின் முடிவில், நடந்த கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில், 47 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இவர்களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மகிந்த ராஜபக்ச , நாமல் ராஜபக்ச, பவித்ரா வன்னியாராச்சி, மகிந்தானந்த அளுத்கமகே, ஜனக பண்டார தென்னக்கோன், ஜனக வக்கும்புர, கனக ஹேரத், திலும் அமுனுகம உள்ளிட்டோரும் அடங்கியிருந்தனர்.

மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, தினேஸ் குணவர்த்தன, உதய கம்மன் பில, விமல் வீரவன்ச ஆகியோரும் கலந்து கொண்டனர். எனினும், வாசு தேவ நாணயக்கார, நிரோசன் பிரேமரத்ன ஆகியோர் இதில் பங்கேற்கவில்லை.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி காலியில் மேநாள் பேரணியை நடத்தியிருந்த நிலையில் அதற்குப் போட்டியாகவே, கூட்டு எதிரணி மகிந்த ராஜபக்சவை முன்னிலைப்படுத்தி இந்தப் பேரணியை நடத்தியிருந்தது.

இதில் பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, இந்தப் பேரணியில் பங்கேற்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த போதும், மகிந்த ராஜபக்ச  உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை மீறியுள்ள நிலையில், இவர்கள் மீதான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது அரசியல் வட்டாரங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

No comments

Powered by Blogger.