முதன்முதலில் UNP யுடன் ஒப்பந்தம் செய்தவர் மஹிந்தவே, நான் இணையவில்லை - மைத்திரி
ஐக்கிய தேசியக் கட்சியுடன் முதன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே என தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.1956ம் ஆண்டு மக்கள் வெற்றியின் 60ம் ஆண்டு பூர்த்தி நிகழ்வுகளில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
1956ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் திகதி முதன் முதலாக முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க இலங்கையின் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் இந்த நிகழ்வு நடைபெற்றது.
2007ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது எனவும், மஹிந்த ராஜபக்ஸவும் ரணில் விக்ரமசிங்கவும் இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்றைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற ரீதியில் தாமும், அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் மலிக் சமரவிக்ரமவும் அலரி மாளிகையில் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் சில மாதங்களில் முறிவடைந்ததனைத் தொடர்ந்தே ஐக்கிய தேசியக் கட்சியின் 27 பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி மஹிந்த ஆளும் கட்சியை பலப்படுத்தினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவில்லை எனவும் மாறாக நாட்டுக்கு பொருந்தாத ஓர் விடயத்தை முடிவுக்குக் கொண்டு வந்தே தாம் செய்த காரியமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment