Header Ads



மக்களே சிறிதுகாலம் பொறுத்திருங்கள், வசந்தகாலம் வரும் - ரவி

எமக்கு நல்லாட்சியை  வழங்கிய மக்கள் இன்னும் சிறிது காலம் பொறுத்திருங்கள் நீங்கள் எதிர்பார்த்த  வசந்த காலம் வரும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

7.5 ஹெடேயர் பரப்பளவைக் கொண்ட காக்கைதீவு கடற்கரைப்பூங்கா, 275 மில்லியன் ரூபா செலவில் மீள் நிர்மாணிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை திறந்து வைக்கபட்டது.

இதனை அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், ரவி கருணாநாயக்க மற்றும் கொழும்பு மாநகர சபை முதல்வர் முஸம்மில் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதன்போது பேசுகையிலேயே நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த கடற்கரைப்பூங்காவின் அபிவிருத்திக்கு உழைத்த அனைவருக்கும் வடகொழும்பு வாழ் மக்கள் சார்பில் நன்றி. கடந்த 11 வருடங்களுக்கு முன்னர் எமது நாட்டை சுனாமி தாக்கியிருந்தது.

இந்தப் பகுதியில் 6 , 7 அடிக்கு மேல் கடல் நீர் பரவியிருந்தது. அது வீடுகளுக்குள்ளும் புகுந்து வீட்டில் இருக்க முடியாத நிலையேற்பட்டிருந்தது. இன்று இது ஒரு அழகிய பிரதேசமாக காட்சியளிக்கின்றது.

வட கொழும்பை மேலும் அபிவிருத்தி செய்யவேண்டியுள்ளது. பாதைகள் புனரமைக்க வேண்டும். வீடுகள் நிர்மாணிக்க வேண்டும்.

இன்னும் வடகொழும்பில் 10, 11 அடி அகலமான வீதிகளே காணப்படுகின்றன. கொழும்பின் ஏனைய பகுதிகளில் 30, 40 அடி அகலமான வீதிகளே காணப்படுகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நல்லாட்சி அரசாங்கத்தில் மக்களுக்கு பல நன்மைகள் உள்ளன.

மக்களுக்கு எந்தவகையிலும் அழுத்தம் கொடுக்காதவகையில்  கிடைக்கும் சிறிய வளத்தையும் அபிவிருத்தி செய்து கொடுத்துள்ளோம்.

ஊழல் மோசடிகளை இல்லாதொழித்துக்கொண்டு செல்கின்ற வேளையிலும் சிறந்த வழிகாட்டலின் கீழ் நாட்டை அபிவிருத்தி செய்கின்றோம்.

கடனிலும் பாரிய ஊழல் மோசடியிலுமே நாம் ஆட்சியை கைப்பற்றினோம். அவ்வாறு இருந்தும் நாம் அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இந்நிலையில், ஏன் தமக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கவில்லையென சிலர் கேட்கின்றனர்.

எங்களுக்கு நல்லாட்சியை  கொடுத்த மக்கள் இன்னும் சிறிது காலம் பொறுத்திருங்கள் நீங்கள் எதிர்பார்த்த வசந்தகாலம் வரும்.

இந்த அழகிய பூங்காவை இன்னும் மெருகூட்டி பாதுகாத்து உங்கள் எதிர்கால சந்ததிக்கு கையளிக்க வேண்டிய பொறுப்பு எமக்குமுண்டு.

இந்த பிரேதச மக்கள் இணைந்து ஒரு குழுவொன்றை உருவாக்கியுள்ளனர் .இந்தப் பகுதியை பாதுகாப்பதற்கு இது வரவேற்கத்தக்கது.

இங்கு  அரசியல் அவசியமில்லை எமது பிரதேசத்தை நாம் பாதுகாப்பதே அவசியம்.

எமது பிரதேசத்திற்கு அடிப்படை வசதிகள் அவசியம், வீடுகள் நிர்மாணித்து, வீதிகள் புனரமைத்து தருமாறு சம்பந்தப்பட்ட அமைச்சிடம் கோரிக்கை விடுக்கின்றேன். அத்துடன் இந்தப்பகுதிக்கு தரமானதொரு வைத்தியசாலையில்லை.

இதற்கு தேவையான செலவு எனது நிதியமைச்சின் மூலம் வழங்கப்படும் என இந்த நேரத்தில் நான் தெரிவித்துக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.