Header Ads



அரசியல் தெரியாதவர்களை பதவியிலமர்த்தினால், என்ன நடக்கும் என்பதற்கு வட மாகாண சபை உதாரணம்

அரசாங்கம் முன்வைத்துள்ள 65 ஆயிரம் வீட்டுத்திட்டம் உகந்ததாக இல்லாவிடின் மாற்றுத் திட்டத்தை வட மாகாண சபை முன்வைக்க வேண்டும் என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பல துயரங்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு வட மாகாண சபை எதுவும் செய்வதாக இல்லை.

மாறாக அவர்களுக்கு சேவையாற்ற மத்திய அரசாங்கம் முயற்சிக்கும்போது அதற்கு மாகாண சபை எதிர்ப்பு வெளியிடுகின்றது. இது குறித்து நாங்கள் கவலையடைகின்றோம்.

ஆனால் மக்களின் தேவைகளை மாகாண சபை நிவர்த்தி செய்யவில்லை. வட மாகாண சபையின் முன்னேற்றம் தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை.

கூட்டமைப்புடன் சண்டை பிடிப்பதற்கே வடக்கு முதல்வருக்கு நேரம் போதாமல் இருக்கின்றது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கு வீட்டுத்திட்டம் மற்றும் அரசாங்கம் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பி்ட்டார்.நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்

குறுகிய காலத்தில் வடக்கு மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்கவே 65000 வீட்டுத்திட்டத்தை உருவாக்கியுள்ளோம். இவ்வாறு குறுகிய காலத்தில் 65 ஆயிரம் வீடுகளை அமைத்துக்கொடுக்க உலகில் வேறு எந்த நிறுவனமும் முன்வரவில்லை. தற்போதைய நிறுவனம் அதற்கு முன்வந்துள்ளது.

ஆனால் ஒரு வீட்டுக்கு தற்போது மதிப்பிடப்பட்டுள்ள செலவுத் தொகை அதிகமானது என்பதனை நாங்களும் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் குறுகிய காலத்தில் இந்த திட்டத்தை முடிப்பதற்கு யாரும் முன்வரவில்லை. எனவே தான் இந்த நிறுவனங்களுடன் நாங்கள் பணிகளை முன்னெடுக்கத் தயாராகினோம்.

அது மட்டுமன்றி எவ்வகையிலாவது மக்களுக்கு வீடுகள் கிடைக்கின்றன என்பதே இங்கு முக்கியமாகும். அப்பாவி மக்களுக்கு எந்த வழியிலாவது வீடுகள் கிடைக்கும்போது அதனை புறக்கணிக்கக்கூடாது. அதனை எதிர்த்துக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை.

இந்நிலையில் வட மாகாண முதலமைச்சர் இந்த திட்டத்தை எதிர்த்துள்ளார். வட மாகாண சபை மக்களுக்கு பயனளிக்கக்கூடிய இந்தத் திட்டத்தை எதிர்த்தமை தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம்.

இதுவரையும் வட மாகாண சபையானது வடக்கு மக்களுக்கு உரிய முறையில் சேவையாற்றவில்லை. அந்த மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்துகொடுக்கவில்லை. மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யவில்லை.

அதாவது வட மாகாண சபை கடந்த காலங்களில் எவ்விதமான முன்னேற்றத்தையும் வெ ளிக்காட்டவில்லை. அவர்கள் முன்னேற்றத்தையே ஏற்படுத்தவில்லை என்றே கூறவேண்டும்.

இந்த நிலையில் மத்திய அரசாங்கம் துயரப்படும் மக்களுக்கு விரைவில் வீடுகளை அமைத்துக்கொடுக்க இந்த 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை முன்னெடுக்கும்போது அதனையும் தற்போது எதிர்க்கின்றனர். இவர்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கின்றனர் என்று தெரியவில்லை.

எனவே வட மாகாண சபை மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் விடயத்தில் பொறுப்புடன் செயற்படவேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றோம். அப்பாவி மக்களின் தேவைகள் குறித்து பொறுப்புடன் செயற்படுங்கள்.

ஆனால் வட மாகாண சபை மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு மாறாக கூட்டமைப்புடன் சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றது.

கூட்டமைப்புடன் சண்டை பிடிப்பதற்கே வடக்கு முதல்வருக்கு நேரம் போதாமல் இருக்கின்றது.அரசியல் தெரியாதவர்களை பதவியில் அமர்த்தினால் என்ன நடக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் தற்போது கிடைத்துள்ளது.

மேலும் இந்த 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்துக்கு பதிலாக மாற்றுத்திட்டம் இருந்தால் வடக்கு முதல்வர் அதனை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கலாம். நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம்.

வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளை விரைவாக தீர்க்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். ஆனால் இந்த விடயத்தில் வடக்கு மாகாண சபையும் பொறுப்புடன் செயற்படவேண்டியது அவசியமாகும்.

இதேவேளை இந்த 65 ஆயிரம் வீட்டுத்திட்டம் தொடர்பான அமைச்சர் சுவாமிநாதனின் அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி நிராகரித்ததாக கூறுவதில் உண்மையில்லை. அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நானும் கலந்துகொண்டிருந்தேன்.

இந்தத் திட்டத்தை விரைவில் செய்து முடிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில்தான் ஜனாதிபதி இருக்கின்றார். ஆனால் அதனை நிராகரித்து விட்டதாக கூறுவதில் உண்மையில்லை என்றார்.

1 comment:

  1. Vikki also same like wise prabakaran.PUDIVAATHAM MANITHANAI ALIKKUM.TAMILS ALWAYS TALKING PAST.ITS NOT A GOOD SIFN.WE HAVE TO THINK ABOUT NEXT.THEN ONLY WE CAN ACHIEVE OUR AIM.PLS THINK AS LONG RIME PLAN.

    ReplyDelete

Powered by Blogger.