வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்குரல், எதிரொலிக்க வேண்டும்
A.அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி )
இலங்கை மண்ணிலே இலங்கையர்கள் அகதிகளாக வாழும் துர்பாக்கியம் வடைக்கிலங்கை முஸ்லிம்களுக்கு ஏக சொத்தாக அமைந்துவிட்டது.இரண்டு பெரும்பான்மை சமூகத்துக்குள் அகப்பட்டு சிக்கி சின்னாபின்னமாகிய சமூக சீரழிவு ஒன்று நிகழ்ந்துள்ளதை இலங்கை முஸ்லிம்கள் உணரக்கடமைபட்டுள்ளனர். பூர்வீக பூமியில் வாழ்ந்து மடிவது மட்டும் போதாது வாழ்வுரிமைக்காக தனி அழகுக்காக தனிநாட்டுக்காக போராடிய சக மதத்தவர்களின் சிறு முன்மாதிரியை கூட நுகர்ந்துகொள்ள முடியாயதவர்களாய் வடக்கின் முஸ்லிம்களின் பயணம் திசைமாறி பயணிக்கிறது.
முஸ்லிம் சமூகத்துக்கு துரோகம் இழைத்து அவர்களின் சொத்துக்களை சூறையாடிவிட்டு அதற்கான இழப்பீடுகள் கொடுக்கமால் இன்னொரு சமுதாய தலைவர்கள் மன்னிப்பில் சுதந்திர வாழ்க்கை வாழ்வது என்பது ஜனநாயகத்தை மதிக்கும் வாழ்க்கை அல்ல.அன்று தீவிரவாதிகளாக எமது சொத்துக்களை சூறையாடினர் இன்று ஜனநாயகவாதியாக மன்னிப்பை இழப்பீடாக தருகின்றனர். ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தின் மீது அத்துமீறி ஜனநாயக ஒழுங்களை மீறி அவர்கள் சொத்துக்களை உரிமைகளை நாசம் செய்துவிட்டு தமது தவறுகளை உணர்ந்து மீண்டும் பொது சிவில் சமூக வாழ்க்கைக்குள் தம்மை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் சர்வதேச ஒப்பந்த அடிப்படையில் பல அம்சங்களை கடைப்பிடித்தே ஆகவேண்டும்.
குறைந்தபட்ச நீதி(Minimal Justice)
ஒரு சாரார் இன்னொரு சாரார் மீது அத்துமீறி அவர்கள் உரிமைகளை நாசம் செய்துவிட்டு சூறையாடிவிட்டு மீண்டும் சகவாழ்வு பொதுவாள்கைகுள் சிவில் சமூக ஜனநாயக வாழ்க்கைக்குள் வர விரும்பினால் கீழ்வரும் பல விடயங்களை அந்த தரப்பு சம்மந்தபடுத்தி செயல்படுத்த வேண்டும். மனித உரிமை ஆணையங்கள் ஊடாக நீதமான விசாரணை ஆணைக்குழு அமைத்தல், அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கென விசேட தற்காலிக நீதிமன்றம் அமைத்தல், இழப்பீடுகளை வரையறை செய்தல், காணாமல் போனவர்கள் பற்றிய விபரம் தேடுதல்
நியாயமான நஷ்ட ஈடுகள்(Compensational Justice)
பாதிக்ப்பட்ட மக்களுக்களிடம் தாம் செய்த தவறுகளை தாம் செய்த அத்துமீறலகளை ஏற்றுகொள்வது என்பது நியாயமான நஷ்ட ஈடுகளை அவர்களுக்கு பெற்றுகொடுப்பதில் தங்கி உள்ளது.எந்தவித நஷ்ட ஈடுகளையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்காமல் வெறும் மன்னிப்பின் மூலம் பொது சிவில் வாழக்கைகுள் சம்மந்தப்பட்ட தரப்பு வரமுடியாது.பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை மதிப்பது என்பது அவர்களுடன் சகவாழ்வு வாழ்வென்பது வெறும் மன்னிப்பின் மூலம் நிறைவேறிவிடாது.பொருத்தமான தீர்வுகளை உரிமைகளை அவர்களுக்கு பெற்றுகொடுக்காமல் சகவாழ்வு என்பது நடைமுறைச்சாத்தியம் அற்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடுகள் என்பது வெறும் பணத்தை பதவியை கொடுப்பதில் மட்டும் தங்கிவிடபோவதில்லை பாதிக்கப்பட்டவர்களின் எதிர்கால சிறந்த வாழ்க்கைக்கான திட்டவரைபு உடல் உள ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வசதி போன்ற விடயங்கள் கீழ்க்காணும் விதமாக அமைக்கப்படவேண்டும்.
1-மீட்டிகொடுக்கப்படவேண்டிய உரிமைகள்:
-பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்புக்கு உள்ளாக முன்பு எவ்வாறு இருந்தார்களோ அந்த நிலைக்கு அவர்கள் ஓரளவு செல்லும் வகையில் உரிமைகள் கொடுக்கப்படவேண்டும்.
-மீள்குடியேற்றம் பற்றிய சரியான கொள்கை வரையருக்கப்படுவதோடு நடைமுறையில்கொண்டுவரப்படவேண்டும்.
-காணாமல் போனோர் பற்றிய விபரம் சுதந்திரமான ஆணையம் மூலம் எடுக்கப்படுவதோடு அந்த குடும்பத்துக்கான இழப்பீடுகள் நியாயமாக வரையறுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு கொடுக்கப்படவேண்டும்.
-பாதிக்கப்பட்டோர் இழந்த சொத்துக்கள சூறையாடப்பட்ட காணிகள் போன்றன திருப்பிக்கொடுக்கப்பட வேண்டும்.
2-மீட்டிகொடுக்கப்படவேண்டிய இழப்பீடுகள்:
-இதில் தனியார் ஒருவரின் பூமியை அரசு பாதுகாப்பு கருதியோ வேறு காரனங்களுக்கோ எடுத்துகொள்ளும் பட்சத்தில் உரியவருக்கு பதிலீடுகள் கொடுக்கப்படவேண்டும்.
-பொருளாதார ரீதியாக இழந்த சொத்துக்களுக்களின் மதிப்புக்கு ஒத்துப்போகும் வகையில் இழப்பீடுகள் பணமாக கொடுக்கப்படவேண்டும்.பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை இதன்மூலம் சீர்படுத்த வேண்டும்.
3-பாதுகாப்பு கல்வி சுகாதார கூடங்கள் அமைக்கப்படவேண்டும்:
-மீள்குடியேற்றம் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சிறந்த வைத்தியசாலைகள் கல்வி உயர்கல்வி கூடங்கள் பாதுகாப்பு நிலையங்கள் என்பன அமைக்கப்படவேண்டும்.
இவ்வாறான திட்டங்களை ஆபிரிக்காவில் மொரோக்கோ அல்ஜீரியா போன்ற நாடுகளும் ஐரோப்பாவில் சில நாடுகள் அமுல்படுத்தி வெற்றியும் கண்டன.எனவே இவ்வாறான ஒரு பதிலீட்டின் மூலமே பாதிக்கப்பட்ட வடக்கு முஸ்லிம்களுக்கு தீர்வுகள் அமையவேண்டுமே தவிர வெறும் தேர்தல்கால உதவிகளோ நிவாரணம் போன்ற உதவிகளோ மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்ட வடக்கிலங்கை முஸ்லிம்களை நிமிர்திவிடப்போவதில்லை.திருப்திப்படுத்தவும் போவதில்லை.
சில சமூக ஆர்வலர்கள் சொல்வதுபோல வடக்கிலங்கை முஸ்லிம்கள் கல்வி பொருளாதாரத்தில் ஐம்பதுவருட பின்னடவை அடைந்துள்ளனர் என்பதை மறுப்பதற்கு இல்லை.இவ்வாறான பின்னடைவை புனர்நிர்மாணம் செய்யப்படவேண்டும் என்றால் மீள்குடியேற்ற நஷ்டஈட்டு கொள்கை ஒன்று மனப்பூர்வமான முறையில் அமைக்கப்படவேண்டும்.பாதிக்கப்பட்ட வடக்கு முஸ்லிம்களுக்கான நஷ்ட ஈடுகளும் புனர்நிர்மாணமும் எவ்வாறான கொள்கை கோட்பாட்டுடன் முன்வைக்கப்பட வேண்டும் என்ற இந்த திட்டவரைபை முஸ்லிம்களை பிரநிதித்துவம் செய்பவர்களிடம் குறிப்பாக வடக்கு முஸ்லிம்களை பிரநிதித்துவம் செய்யும் அரசியல் சமூக ஆன்மீக தலைவர்களிடம் முன்வைக்கின்றேன்.
எந்த தீர்வு யோசனையும் முதலில் கோட்பாட்டு ரீதியாக அலசப்பட்டு கொள்கை ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்டு அதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு போதித்து அதன் ஊடாக உரிமைகளை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதே இருண்டுபோன சமூகத்தின் எழுச்சிக்கான எடுத்துகாட்டாக அமையும்.வடக்கிழங்கை முஸ்லிம்கள் இனியும் தமது உரிமைகளை எது என்று அறியாமல் இருப்பது அவற்றை இனம்காணமுடியாமல் ஒடுக்கப்படுவது என்பது உரிமைகளை பெற்றுகொள்லாமல் இருப்பதைவிட மோசமான நிலையாகும். இழந்துபோன எமது இறந்தகால உரிமைகளை உடைமைகளை பெற்றுக்கொள்ளுதல் சுப்பீட்சமான எதிர்கால இருப்பு என்பன நிகழ்கால நகர்வை பொறுத்தே அமையும்.எமது உரிமைகளையும் உடமைகளையும் இழந்தது போதும் எமது அடையாளத்தையும் இழந்துவிடாமல் இருக்க மக்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது காலத்தின் தேவையாகும்.

Post a Comment