Header Ads



இந்தியர்களுக்கு இலவச, உணவு வழங்கும் பாகிஸ்தானியர்..!

சில நாட்களுக்கு முன் மும்பையில் ஒரு பாகிஸ்தானிய குடும்பம் விடுதி கிடைக்காததால் நடு ரோட்டில் தங்களின் பொழுதை கழித்ததை மறந்திருக்க மாட்டோம். இந்திய அரசும் பாகிஸ்தானிய அரசும் போட்டி போட்டுக் கொண்டு இரு நாட்டு மக்களையும் பிரித்து வைத்தே தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர். சில அரசியல் அமைப்பினரோ பாகிஸ்தானை இந்தியாவின் எதிரியாகவே, இந்திய மக்களுக்கு சித்தரித்து வருகின்றனர். 'பாகிஸ்தானை சேர்ந்தவர்' என்றாலே அவர் 'இந்தியாவுக்கு எதிரானவர்' என்ற எண்ணம் பல இந்தியர்களின் மனதில் ஆணி வேராக பதிந்திருக்கின்றது. 

இதை தகர்க்கும் வகையில் பாகிஸ்தானை சேர்ந்த தொழிலதிபரான இக்பால் லத்திஃப், ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். பாகிஸ்தானை சுற்றிப் பார்க்க குறுகிய கால விசாவில் வருகை தரும் அனைத்து இந்தியர்களுக்கும், தனது 'டங்கின் டோனட்ஸ்' உணவகத்தின் அனைத்து கிளைகளிலும் உணவும், டோனட்டும் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை இக்பால் விடுத்துள்ளார். பாகிஸ்தானிலுள்ள இஸ்லாமாபாத், லாகூர், பேஷாவர் ஆகிய நகரங்களில், உலகப் புகழ் பெற்ற டோனட் உணவகமான டங்கின் டோனட்ஸின் 26 கிளைகளின் உரிமையாளரான இக்பால், இந்த அறிவிப்பை விடுத்த சில நாட்களில் 2400 க்கும் அதிகமான இந்தியர்கள், தனது உணவகங்களில் உண்டு மகிழ்ந்ததாக கூறி பெருமை கொள்கிறார். 

'ஒரு பாகிஸ்தானிய குடும்பம் தங்குவதற்கு இடமின்றி காவல் நிலையத்திலும் ரோட்டோரத்திலும் தங்கியிருந்ததை பத்திரிக்கைகளில் படித்தேன். இது என்னை மிகவும் பாதித்தது. இது போன்று மனிதர்களுக்குள் பிறந்த நாட்டை வைத்து வெறுப்பை வளர்க்காமல் நட்புக் கரம் நீட்ட என்னால் ஆன சிறிய முயற்சியே இது' என்கிறார் இக்பால் லத்தீஃப். 

வாழ்த்துக்கள் இக்பால் லத்தீஃப் அவர்களே!

தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா

No comments

Powered by Blogger.