பிரித்தானிய பிரதமரின் முன்மாதிரி
பிரித்தானிய பிரதமரான டேவிட் கமெரூன் தன்னுடைய குழந்தைகள் தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களை பயன்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்திருப்பதாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
பிரதமரான டேவிட் கமெரூன் மற்றும் சமந்தா தம்பதிக்கு நான்சி(11) எல்வின்(9) மற்றும் ஃபுளோரன்ஸ்(5) என 3 குழந்தைகள் உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் பிரதமராக வெற்றி பெற்றதற்கு பின்னர், அரசு மாளிகையான ‘No 10’ வீட்டிலேயே அனைவரும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரித்தானியாவை சேர்ந்த ’தி சன்’ என்ற செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் டேவிட் கமெரூன் தனது குடும்ப வாழ்க்கை குறித்து இன்று பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், தொழில்நுட்பங்கள் மிக வளர்ச்சி அடைந்துள்ள இந்த நவீன காலத்தில் குழந்தைகளை சில கட்டுப்பாடுகளுடன் வளர்ப்பது மிக அவசியம்.
குறிப்பாக, தொலைக்காட்சி, கைப்பேசி மற்றும் கணிணிகளை அதிக நேரம் பயன்படுத்துவதால் எண்ணற்ற உடல் உபாதைகள் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு ஒரு தந்தையாக தனது குழந்தைகளுக்கு மிகுந்த கட்டுப்பாடுகள் விதித்திருப்பதாக கமெரூன் மனம் திறந்து பேசியுள்ளார்.
வாரத்தின் அனைத்து நாட்களிலும், மதிய உணவிற்கு முன்னர் 3 குழந்தைகளும் தொலைக்காட்சி பார்ப்பதற்கு தடை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி மட்டுமின்றி, இணையத்தளங்கள் மூலம் தவறான படங்கள் அல்லது புகைப்படங்கள் பார்க்க வாய்ப்புள்ளதால் அதனை சில கட்டுப்பாடுகளுடன் மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது என வெளிப்படையாக பேட்டி அளித்துள்ளார்.
டேவிட் கமெரூனின் முதல் மகனான இவான்(7) உடல் ஊனமுற்ற நிலையில் பிறந்ததால், கடந்த 2009ம் ஆண்டு சிகிச்சையின்போது பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment