"எனக்கு கடலில் மிதந்தும், வானத்தில் பறந்தும் சேவை செய்யும் அமைச்சு தேவையில்லை"
எனக்கு கடலில் மிதந்து கொண்டும் வானத்தில் பறந்து கொண்டும் சேவை செய்யும் அமைச்சு தேவையில்லை, மக்களுக்கு சேவை செய்யக் கூடிய ஓர் அமைச்சுப் பதவி கிடைத்தால் போதும் என ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொட்டகலையிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தொழிற் பயற்சி நிலையத்தில், தோட்ட தலைவர்மார்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மலையகத்தில் தோட்ட நிர்வாகமும் கம்பனிகளும் இணைந்து சதிவேலையில் ஈடுபட்டுள்ளன. எனவே, மக்கள் விழிப்புணர்வுடன் செயற்படவேண்டும்.
காணிகளை பிரித்து தருவதாக கூறி, தொழிலாளர்களிடம் கையொப்பம் வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இதேவேளை சில தோட்டங்கள் முழுமையாக மூடப்பட்டு விட்டன. அப்பகுதியிலுள்ள தோட்ட தொழிலாளர்கள் தற்போது வேலையின்றி பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
சம்பள பேச்சுவார்த்தையை தொடர்ந்து தோட்டங்களில் காணிகளை பிரித்துக் கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தி அதை தடுக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment