கிரிக்கெட் போட்டி நடைபெற்ற இடத்தில், கார் குண்டு தாக்குதல் 9 பேர் மரணம், 50 பேர் காயம்
ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்திகா மாகாணம் பாகிஸ்தான் எல்லையையொட்டி உள்ளது. இந்த மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் நேற்று கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை ஓட்டிவந்த தீவிரவாதி, போட்டியை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் கூட்டத்தில் காரை மோதச் செய்து வெடிக்கச் செய்தான்.
இதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். முதலில் கால்பந்து போட்டி நடைபெற்றபோதுதான் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது என்று கூறப்பட்டது. பின்னர், உள்துறை அமைச்சகம் அங்கு கிரிக்கெட் போட்டிதான் நடைபெற்றது என்று தெரிவித்தது.
உள்ளூர் அரசு அதிகாரிகள் இந்த போட்டியை பார்க்க வருவார்கள். அவர்களை குறிவைத்துதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் கடந்த ஆண்டு கைப்பந்து போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது தாக்குதல் நடைபெற்றது. இதில் 50 பேர் பலியானார்கள்.
இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க தலிபான் தீவிரவாதிகள் மறுத்துவிட்டனர். தலிபான் தீவிரவாத கும்பலைத் தவிர மற்ற சில பயங்கரவாதிகள் கும்பலும் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வருகிறது. அந்த கும்பல் இதுபோன்ற மக்கள் கூடும் இடத்தில் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நேட்டோ படையில் பெரும்பாலான வீரர்கள் அங்கிருந்து சென்றபின் தீவிரவாத தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிகாரத்தில் இருந்து 2001ம் ஆண்டில் தலிபான்கள் வெளியேற்றப்பட்டாலும், அதன்பின்னர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment