இழுபறி நிலையை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதியும், சபாநாயகரும் பங்களித்தார்கள் - ரணில்
நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவாகும் எவரும் தமது அதிகாரத்தை கைவிடுவதில்லை. அந்த கருத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாற்றியுள்ளார். பாராளுமன்றத்தை பலப்படுத்துவதற்காக வரலாற்று முக்கியமான நடவடிக்கையை அவர் எடுத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட பின்னர் 5 பேர் இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்றனர். இதில் சம்பந்தன் எம்.பி தவிர நாம் மூவர் நிறைவேற்று அதிகாரத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்களாகும்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமூலம் நாட்டில் பாரிய மாற்றங்கள் இடம்பெற்றன. சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது ஐ.தே.க அரசு கஷ்டங்களுக்கு மத்தியில் செயற்பட்டது. இறுதியில் தேர்தலுக்கு செல்ல நேரிட்டது. வேறுபட்ட இரு கட்சிகள் ஒன்றாக செயற்பட்டது. இதுவே முதல் தடவையாகும். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் யுத்தத்தை செய்வதற்காக நிறைவேற்று அதிகாரம் தேவை எனத் தெரிவிக்கப்பட்டது.
பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு சென்றன. ராஜபக்ஷ ரெஜிமென்ட் தான் அனைத்தையும் நிர்வகித்தன. நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கவும் 18ஆவது திருத்தத்தை நீக்கவும் கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டது. எமது 100 நாள் திட்டத்தில் ஜனாதிபதி முறையை ஒழிப்பதே பிரதானமாக இருந்தது. அது தவிர விருப்பு வாக்கற்ற தேர்தல் முறையை மாற்றவும் திட்டமிடப்பட்டது.
நிறைவேற்று ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை பிரதமரினூடாக பாராளுமன்றத்துக்கு வழங்கவும் 17ஆவது திருத்தத்தை செயற்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டது. 6 சரத்துக்களுக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது. நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கவும் அமைச்சரவையினூடாக பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்களும் திட்டமிடப்பட்டன.
அடுத்த தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தை அரசியலமைப்பாக மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்குவதே எமது நோக்கமாகும். நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவாகும் எவரும் தமது அதிகாரத்தை கைவிடுவதில்லை. அந்த கருத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாற்றியுள்ளார். பாராளுமன்றத்தை பலப்படுத்துவதற்காக வரலாற்று முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளார்.
அரசியலமைப்பு சபை பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூற வேண்டும் என்பதை ஏற்கலாம். இதற்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் எம்பிக்களாக இருக்க வேண்டும் என எதிர்தரப்பு கோரியது. எமக்கு பெரும்பான்மை கிடையாது இதன்படி 7 எம்பிக்களையும் 3 அரசியல் பிரதிநிதிகள் அல்லாதவர்களையும் நியமிக்கவும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.
ஆனால் அரசியலமைப்பு சபைக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் அரசி யலமைப்புக்கு அப்பாலே நியமிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். வெஸ்மினிஸ்டர் முறைக்கு நெருக்கமான முறையே கொண்டு வரப்பட வேண்டும். எவருக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது. எமக்கு தேர்தல் முறை மாற்றம், தகவல் அறியும் சட்டமூலம், கணக்காய்வு சட்டமூலம் என்பவற்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இழுபறி நிலையை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதியும் சபாநாயகரும் பங்களித்தார்கள் என்றார்.

Post a Comment