Header Ads



40 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இணைந்து, நடாத்திய ஊடகவியலாளர் மாநாடு..!

நாடாளுமன்றத்தில் நிதிச் சட்டமூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளதால் அரசு உடனடியாக பதவி விலக வேண்டும். அவ்வாறு இல்லையேல் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என்று தினேஷ் குணவர்த்தனவை எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்கவேண்டும் என்ற பிரேரணையில் கையயாப்பமிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று எச்சரிக்கை விடுத்தது.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவராக தினேஷ் குணவர்த்த னவை நியமிப்பதற்குரிய பெரும்பான்மை காண்பிக்கப்பட்டுள்ளது என்றும், எனவே, அப்பதவியை சபாநாயகர் அவருக்கு வழங்கவேண்டும் என்றும் மேற்படி குழு வலியுறுத்தியது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும்  நாடாளுமுன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சரான தினேஷ் குணவர்த்தனவை எதிர்க்கட்சித் தலைவராக்க வேண்டுமென வலியுறுத்திவரும் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவினர் நாடாளுமன்ற குழு அறை ஒன்றில் நேற்று ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தினர்.

முன்னாள் அமைச்சர்களான பந்துல குணவர்த்தன, விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார, ஜி.எல்.பீரிஸ், குமார வெல்கம, காமினி லொக்குபண்டார, டி.பி. ஏக்கநாயக்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட எம்.பிக்கள் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்றிருந்தனர். 

இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே முன்னாள் அமைச்சர் குமார வெல்கம அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என்ற விடயத்தைக் குறிப்பிட்டார்.

"நான் சுதந்திரக் கட்சியில் 33 வருடங்களாக இருக்கின்றேன். நாடாளுமன்றத்துக்கு வந்து 23 வருடங்களாகின்றன. தற்போது கவலையுடன், அதிருப்தியுடன் இருக்கிறோம். 

முதுகெலும்புடன் எதிரணியில் அமரவேண்டும். இவ்வாறு தற்போது நடைபெறுவதாகத் தெரியவில்லை. எனவேதான் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தினேஷிக்கு வழங்குமாறு கோருகிறோம்.

குறிப்பாக, நிதிச் சட்டமூலமொன்று தோற்கடிக்கப்பட்டுள்ளதால் அரசு பதவி விலகவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும்'' என்றார் அவர்.

அதேவேளை, இதன்போது கருத்தது வெளியிட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ, "எதிர்க்கட்சித் தலைவராக தினேஷ் குணவர்த்தனவை நியமிக்குமாறு 62 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியக்கடதாசி மூலம் உறுதியளித்துள்ளனர். மேலும் சிலர் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். 

எதிர்க்கட்சித் தலை வராவதற்கு தினேஷிக்கு தகுதி இருக்கிறது. தற்போது அவர் அந்தப் பதவியைச் செய்து வருகிறார். எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் தண்டிக்கும் பழிவாங்கும் இந்த அரசை ஆதரிக்க முடியாது'' என்றார்.

No comments

Powered by Blogger.