மஹிந்த அரசுபோல, மைத்திரி அரசிலும் - அரியநேத்திரன்
ஆட்சி மாறிய போதும் தமிழ் மக்களுக்கான கெடுபிடிகள் கைதுகள் அச்சுறுத்தல்கள் இன்னும் குறையவில்லை. இதை சர்வதேச சமூகம் கவனத்தில் எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற பின் வடகிழக்கு தமிழ் மக்களுக்கு நிம்மதி ஏற்படும் என எதிர்பார்த்த போதும் அது எமக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்காகவும் புலம்பெயர்ந்து வாழ்பவர்களும் சுதந்திரமாக கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் வேலை வாய்ப்புக்காக சென்றவர்களும் ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களும் கடந்த மஹிந்த அரசுபோல் மைத்திரி அரசிலும் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வாளர்களால் விசாரணை செய்யப்பட்டு 4 ஆம் மாடியிலும் ஏனைய சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் மத்திய கிழக்கு நாட்டில் வேலை வாய்ப்புக்காக சென்று விடுமுறையில் நாடு திரும்பிய மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களும் யாழ். மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுமாக ஏறக்குறைய ஒன்பது இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் பிரான்சில் இருந்து இலங்கைக்கு வருகை தந்து தமது உறவினர்களை கிளிநொச்சியில் பார்வையிட்டு செல்லும் போது 41 வயதான முருகேசு பகீரதி எனும் தாயும் அவரின் 8 வயதுடைய சிறுமியும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் மீண்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள். உண்மையிலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் தமக்கு ஏதும் நடக்காது என்ற நம்பிக்கையில் இவ்வாறு வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருபவர்களை திட்டமிட்டு அவசர காலச்சட்டத்தை வைத்துக் கொண்டு கைது செய்வதானது கண்டிக்கத்தக்க விடயமாகும். தொடர்ந்தும் அவசர கால சட்டத்தை வைத்துக் கொண்டு நல்லாட்சியைப் பற்றியும் இணக்க ஆட்சியைப் பற்றியும் தேசிய ஆட்சியைப் பற்றியும் கூட்டாட்சியைப் பற்றியும் பேசுவது முழு உலகத்தையே ஏமாற்றும் செயலாகும்.
இதைவிட வவுனியாவில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இப்படியான சம்பவங்களை பார்க்கும் போது தொடர்ந்தும் அவசர கால சட்டத்தை வைத்துக்கொள்வதற்காக இவ்வாறான சம்பவங்கள் சர்வதேசத்துக்கு காட்டப்படுகின்றதா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.

Post a Comment