Header Ads



இலங்கை அரசியல்வாதிகள் இங்கிலாந்தில் மறைத்து வைத்திருக்கும் சொத்துக்களை கண்டறிய நடவடிக்கை

இலங்கை அரசியல்வாதிகள் இங்கிலாந்தில் மறைத்து வைத்திருக்கும் சொத்துக்களை கண்டறியவதற்காக இலண்டனிலுள்ள மோசடிகளை கண்டறியும் அலுவலகத்தின் உதவியை நாடியிருப்பதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கூறினார்.

இதேவேளை, அமைச்சர் விஜேதாச அண்மையில் இங்கிலாந்துக்கு விஜயம் செய்தபோது மேற்படி அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகளுடன் இது குறித்து பேச்சு நடத்தியுள்ளார்.

மோசடிகளை கண்டறியும் அலுவலகமானது இங்கிலாந்தில் சுயாதீனமாக இயங்கும் ஒரு அரசாங்க அலுவலகமாகும். இது அந்நாட்டின் சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் இயங்கி வருகிறது.

இந்த அலுவலகத்திற்கு பாரதூரமான மற்றும் சிக்கலான ஏமாற்று செயற்பாடுகள், ஊழல் மோசடிகள் அல்லது அதற்காக முயற்சித்தல் மற்றும் ஏனைய பாரிய குற்றச் செயல்கள் குறித்து இந்த அலுவலகம் சுயாதீனமாக விசாரணைகளை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தும் அதிகாரங்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த அலுவலகம் தனது கொள்கைகளுக்கமைய செயற்பாடுகளை முன்னெடுக்கும்.

ஒரு சில அரசியல்வாதிகளினால் இங்கிலாந்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சொத்துக்களை கண்டறிவதற்காக இலங்கை அரசாங்கத்துடன் இந்த அலுவலகம் இணைந்து செயற்படுமெனவும் அமைச்சர் கூறினார்.

வேறு நாடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சொத்துக்களை கண்டறியும் செயற்பாட்டின் போது சட்டங்கள் சிக்கல் நிலைக்கு உள்ளாகின்றன. அதன் காரணமாகவே சர்வதேச தரப்பினரின் தொழில்நுட்ப உதவிகளில் நாம் பெருமளவில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருடப்பட்ட சொத்துக் களை மீட்பதென்பது ஒரு இரவில் செய்து முடிக்க கூடிய விடயமல்ல. ஆனாலும் தற்போது நாம் சரியான இடத்திலேயே உள்ளோம்? என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

விசாரணைகளடிப்படையில் கடந்த அரசாங்கத்தின் பல அமைச்சரவை அமைச்சர்கள் தமது சொந்த பெயரிலும் வேறு பெயர்களிலும் இங்கிலாந்தில் பல சொத்துக்களை வாங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த இலண்டன் அலுவலகத்தின் விசாரணைகளானது, உலக வங்கியின் திருடப்பட்ட சொத்துக்களை கண்டறியும் நிகழ்ச்சித் திட்டத்தின் செயற்பாடுகளுக்கு புறம்பானதாகவே அமையும்.

உலக வங்கியின் மேற்படி நிகழ்ச்சித் திட்டத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் கடந்த வாரம் இலங்கை வந்து அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியிருந்தனர்.

கடந்த வரவு - செலவு திட்டத்தின் துண்டு விழும் தொகையின் 75 சதவீதமானது உக்ரேன், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சுவிற்சலாந்து ஆகிய நாடுகளில் முக்கிய அரசியல் புள்ளிகளால் வைப்பிடப் பட்டுள்ளமை தெரிய வந்திருப்பதாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.