Header Ads



இங்கிலாந்திற்கு பாடம் கற்பித்த பங்களாதேஸ் - இலங்கை காலிறுதிக்கு தகுதி

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து நடத்தும் 2015 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியிடம் தோற்ற இங்கிலாந்து அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.

இரு அணிகளுக்குமே மிகவும் முக்கியமாக கருதப்பட்ட இந்தப் போட்டியில் வங்கதேச அணி, இங்கிலாந்து அணியை 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

அடிலெய்ட் ஓவலில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய வங்கதேச அணி தமது 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 275 ஓட்டங்களை எடுத்தது.

அந்த அணியில் சார்பில் மஹ்மதுல்லா சிறப்பாக ஆடி சதமடித்தது இன்றைய ஆட்டத்தின் சிறப்பம்சமாகும்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 48.3 ஓவர்களில் 260 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இங்கிலாந்து அணியின் சார்பில் இயன் பெல்லும், பட்லரும் தலா 60 ஓட்டங்களுக்கு மேல் பெற்றாலும் அணியின் தோல்வியை அவர்களால் தடுக்க முடியவில்லை.

வங்கதேச அணி இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே மிகவும் பாதுகாப்பாக ஆடினர். முஷ்ஃபிக்குர் ரஹீம் மற்றும் மஹ்மதுல்லா ஜோடி பொறுமையாகவும் உறுதியாகவும் ஆடியது வங்கதேசத்துக்கு வலுவான ஒடு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

காலிறுதிப் போட்டிக்கு கூடத் தகுதி பெறாமல் உலகக் கோப்பை போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது மிகவும் ஏமாற்றமளிக்கிறது என இங்கிலாந்து அணியின் தலைவர் ஓயின் மார்கன் போட்டிக்கு பிறகு தெரிவித்தார்.

தமது அணியினர் முழுத்திறமையுடன் விளையாடினால், எந்த அணியையும் வெல்ல முடியும் என்பதற்கு இந்த ஆட்டம் ஒரு உதாரணம் என வங்கதேச அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவி புரிந்த மஹ்மதுல்லா கூறினார்.

இங்கிலாந்தை வங்கதேச அணி வீழ்த்தியன் மூலம் இலங்கையும் காலிறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது. வங்கதேச அணியின் வெற்றியை அடுத்து 'ஏ' பிரிவில் நான்காவது இடத்தை இலங்கை பெற்றுள்ளது.

இலங்கை அணி 'பி' பிரிவின் முதலிடத்தைப் பெறும் அணியுடன் காலிறுதி ஆட்டத்தில் மோதுவார்கள். அந்த ஆட்டம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மார்ச் மாதம் 18 ஆம் தேதி நடைபெறும்.

வங்கதேச அணி மார்ச் மாதம் 19 ஆம் தேதி 'பி' பிரிவில் இரண்டாவது இடத்தைப் பெறும் அணியை எதிர்த்து மெல்பர்ண் நகரில் விளையாடும்.

1 comment:

  1. இங்கிலாந்தை வீழ்த்தியது சிறந்த விடயம்தான். ஆனால் காலிறுதிப்போட்டியில் இன்றுவரை தோற்றிடாத பலமான அணியாக இருந்துவரும் இந்தியாவை வீழ்த்தினால் மட்டுமே பங்களாதேஷ் அடுத்தகட்டத்திற்கு முன்னேறி சாதனை படைக்க முடியும்.

    ReplyDelete

Powered by Blogger.