"எமது ஒரே மகளுக்காக, எமது இதயங்கள் உடைந்துபோயுள்ளன''
இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவின் பிடியில் இருந்த கடைசி அமெரிக்க பிணைக்கைதியான பெண்மணி கைலா ஜPன் முல்லர் கொல்லப்பட்டதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. இந்த செய்தி வெளியானதையொட்டி மனமுடைவதாக குறிப்பிட்டிருக்கும் குறித்த பெண்ணின் குடும்பத்தினர், அவர் பிணைக்கைதியாக இருந்த போது எழுதிய கடிதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
அவரது மரணத்திற்கு அஞ்சலி செலுத்துவதாக குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, "அவர் அமெரிக்காவின் சிறந்த பிரதிநிதியாகவும் இருந்தார்" என்று கூறியுள்ளார். கடந்த 18 மாதங்களாக ஐ.எஸ். பிடியில் இருந்த தொண்டு நிறுவன ஊழியர் கைலா ஜPன் முல்லர் ஜோர்தான் வான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்லாமிய தேசம் குழு குறிப்பிட்டிருந்தது. ஆனால் ஐ.எஸ்.
தான் அவரை கொன்றது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் குறிப்பிட்டுள்ளது. கைலா முல்லர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது குறித்து தமக்கு இன்னும் தெரியாது என்று அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டுள்ளது.தமது விமானப்படை வீரரை உயிரோடு தீயிட்டு கொல்லும் வீடியோவை ஐ.எஸ். வெளியிட டதை அடுத்து அதன்மீதான வான் தாக்குதலை தீவிரப்படுத்திய ஜோர்தானும் தமது தாக்குதலில் கைலா முல்லர் கொல்லப்பட்டதான செய்தியை நிராகரித்தது.
26 வயதான முல்லர் சிரியாவின் அலப்போ நகரில் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையிலேயே 2013 ஆம் ஆண்டு கடத்தப்பட்டார். "எமது ஒரே மகளுக்காக எமது இதயங்கள் உடைந்துபோயுள்ளன. அவளது அமைதி, கௌரவம் மற்றும் அன்புக்காக நாம் தொடர்ந்து பிரார்த்திப்போம்" என்று முல்லரின் குடும்பத்தினர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு முல்லர் தனது குடும்பத்தினருக்கு அனுப்பிய கடிதத்தில் தாம் கௌரவமாகவும் தயவுடனும் நடத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்."நான் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறேன். எனக்கு எந்த பாதிப்பும் இல்லை, நல்ல சுகத்துடன் (சற்று எடையும் போட்டிருக்கிறது) இருக்கிறேன். இங்கு என்னை கௌரவத்துடனும் தயவுடனும் நடத்துகிறார்கள்" என்று அந்த கடிதத்தில் முல்லர் குறிப்பிட் டுள்ளார்.

Post a Comment