Header Ads



அப்பா வேலையை விட்டு, இன்னும் வரவில்லையா..? விமானியின் மகனுடைய அழுகை

QZ8501 ஏர் ஏசியா விமானம், இந்தோனேசியாவின் சுரபயா நகரிலிருந்து கடந்த 28ம் தேதி அதிகாலை 5:36 மணியளவில் சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது. 

புறப்பட்ட 45 நிமிடங்களில் திடீரென காணாமல் போனது. அதில், 155 பயணிகளும், ஏழு பணியாளர்களும் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர், இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. 

அப்போது விமானம் காணாமல் போன இடத்திற்கு அருகே கடலில் அதன் பாகங்கள் மிதப்பதை மீட்பு படையினர் கண்டுபிடித்தனர். அதன் பிறகு நடந்து வரும் மீட்புப் பணிகளில் இதுவரை 7 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 

இந்த விமானத்தின் விமானியான கேப்டன் இரியண்டோவின் குடும்பத்தினர் இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் உள்ள சிடோர்ஜோ நகரில் வசிக்கின்றனர். அவரின் எட்டு வயது மகன் ஆர்யாவோ, தனது தந்தை இன்னும் வேலைக்குச் செல்வதாகவே நினைத்து வருகிறான். 

அப்பா வேலையை விட்டு இன்னும் வரவில்லையா என்று கேட்டு அழுவதாக இரியண்டோவின் சகோதரர் சுடினோ தெரிவித்தார். அவனுடைய பிஞ்சு மனதைக் காயப்படுத்த வேண்டாமென்று யாரும் வீட்டில் டி.வி கூட போடுவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக என்ன நடந்தது என்பதை அவனுக்கு தெரிய வைக்க அவர்கள் முடிவெடுத்துள்ளனர். 

கேப்டனின் 22 வயது மகள் ஏஞ்சலா காணாமல் போன விமானத்தின் பாகங்கள் கடலில் இருப்பதாக வந்த செய்தியை அறிந்ததும்  ”அப்பா வீட்டிற்கு வந்துவிடுங்கள். எனக்கு நீங்கள் வேண்டும். என் அப்பாவை என்னிடம் கொண்டு வந்து சேர்த்து விடுங்கள்” என்று சமூக வலைதளத்தில் ஏக்கத்துடன் பதிவிட்டார். 

தனது உறவினர்களுக்கு மட்டுமின்றி தான் வசித்த பகுதியில் உள்ள பலருக்கும் கஷ்ட காலங்களில் உதவி செய்பவராகவே இரியண்டோ இருந்துள்ளார். அவருக்காக நிறைய பேர் பிரார்த்தித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.