காதலுக்கு உதவுவதற்காக இன்ஸ்பெக்டர் வேடமிட்ட, பௌத்த பிக்கு கைது
பௌத்த பிக்கு ஒருவர் பொலிஸ் வேடமிட்டு, தனது நண்பர் ஒருவரின் காதலுக்கு உதவ முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலையில் வரக்காப்பொல பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
குறித்த பிக்குவின் நண்பர் ஒருவர் வரக்காப்பொல பிரதேசத்தில் வசிக்கும் யுவதியொருவரை காதலித்துள்ளார். எனினும் இவர்களின் காதலுக்கு இருதரப்பிலும் எதிர்ப்பு வலுத்துள்ளது.
நண்பரின் காதலுக்கு எதிராக உள்ள இரு தரப்பு பெற்றோர்களையும் சமாதானப்படுத்தி, காதலர்களை சேர்த்து வைக்கும் நோக்கில் குறித்த பிக்கு பொலிஸ் இன்ஸ்பெக்டர் வேடமிட்டு தனது நண்பருடன் அவரது காதலி வீட்டுக்குச் சென்றுள்ளார்.
எனினும் காதலி வீட்டார் இது குறித்து வரக்காப்பொல பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்த, விரைந்து வந்த பொலிசார் இன்ஸ்பெக்டர் வேடத்தில் இருந்த பிக்கு மற்றும் அவரது நண்பர் இருவரையும் கைது செய்துள்ளனர்.
தற்போது அவர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Post a Comment