கரையோர மாவட்ட கோரிக்கையை எதிர்க்கிறோம், மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் உடன்பட்டது
கரையோர மாவட்ட பரிபாலனக் கோரிக்கை தொடர்பில் ரவூப் ஹக்கீமிற்கும் மைத்திரிக்குமிடையில் இரகசிய ஒப்பந்தம் ஏதுமில்லை. அதற்கு நாம் உடன்படவும் மாட்டோம். மு.கா.வினர் பொதுவேட்பாளரின் விஞ்ஞாபனத்திற்கு மாத்திரமே உடன்பட்டு வருகை தந்துள்ளனர். இந்த கூட்டணியில் பரஸ்பர கொள்கைக்கு இடமில்லை என ஜாதிக ஹெல உறுமயவின் பொது செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
மேலும், மஹிந்த ராஜபக்ஷ அவசர பாராளுமன்றத்தை கூட்டி அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் ஒரு எழுத்தையேனும் மாற்றியமைத்தால் நாம் ஜனாதிபதியுடன் இணைவோம். எனினும் அவரால் அதனை செய்ய இயலாது எனவும் அவர் சாடினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றபோது சமாதான உடன்படிக்கையை பாதுகாக்கவே நாம் முனைந்தோம். எனினும் சமாதான உடன்படிக்கையை மீறும் வகையில் மைத்திரிபால சிறிசேனவை கொல்லமுனைந்த சமயமும் ஜெனரல் சரத் பொன்சேகா தாக்கப்பட்ட போதும் அந்த சமாதான உடன்படிக்கையை கிழித்தெறிந்து விட்டு யுத்தத்திற்கு செல்லுமாறு மஹிந்த ராஜபக்ஷவிற்கு நாமே அழுத்தம் பிரயோகித்தோம். எனினும், மஹிந்த ராஜபக்ஷ ஜெனிவாவில் விடுதலை புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதிலேயே முன்னிலை வகித்தார்.
ஒவ்வொரு தருணமும் நாட்டின் பயணத்தை நாமே தீர்மானித்தோம். எதிர்காலத்திலும் அவ்வாறே எமது செயற்பாடுகள் காணப்படும். மேலும், அரசியலமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்தியது மஹிந்த ராஜபக்ஷவாகும். வட மாகாண சபையை மீள ஸ்தாபித்தது மஹிந்த ராஜபக்ஷவே. இதனை ரணிலோ, சந்திரிகாவோ செய்யவில்லை.
நாம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு சவால் விடுக்கிறோம். ஜனாதிபதி அதிகாரங்களை பிரயோகம் செய்து பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டி, அரசியலமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்திலுள்ள ஒரு எழுத்தையேனும் மாற்ற வேண்டும். அதன்போது ஜனாதிபதிக்கு நாம் ஆதரவளிக்க தயார். எனினும் அதனை அவர் நிறைவேற்றப்போவதில்லை.
பெளத்த சிங்கள மக்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்தது நாமே. பொதுபலசேனா தற்போது மக்களின் கவனத்தை திசை திருப்ப முனைகின்றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிரணியுடன் இணைந்துள்ளனர். தற்போது ஹக்கீம் - மைத்திரி இரகசிய ஒப்பந்தம் இருப்பதாக குற்றம் சுமத்துகின்றனர். எனினும் மு.கா. வின் கரையோர மாவட்ட பரிபாலன கோரிக்கை தொடர்பில் ரவூப் ஹக்கீமிற்கும் மைத்திரிபால சிறிசேனவிற்குமிடையே எந்தவொரு இரகசிய ஒப்பந்தமும் இல்லை. மாறாக பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மீது உடன்பட்டே மு.கா. எதிரணியுடன் இணைந்தது.பொது வேட்பாளரின் விஞ்ஞாபனத்திற்கு உடன்பட்டால் எவரும் எதிரணியுடன் இணைந்து கொள்ளலாம் என்றார்.

Post a Comment