வடக்கில் இன்று பொது எதிரணியினர் - பிந்நேரம் யாழ்ப்பாணம் செல்வர்
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளுக்காக பொது எதிரணியினர் இன்றைய தினம் வடக்குக்கு வருகைதரவுள்ளனர். மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இன்று இடம்பெறும் பரப்புரைக் கூட்டங்களில் இவர்கள் பங்கெடுக்கவுள்ளனர். மன்னாரில் காலை 8.30 மணிக்கு மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து 9 மணிக்கு மன்னார் நகரசபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்பர். பின்னர் காலை 10 மணிக்கு வவுனியாவிலும், பிற்பகல் 2 மணிக்கு முல்லைத்தீவிலும், 3 மணிக்கு கிளிநொச்சியிலும் பரப்புரைக் கூட்டம் நடத்தவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால தலைமையிலான குழுவினர் மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள கிட்டு பூங்காவில் நடைபெறும் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்பர். அதனைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு யாழ்.மாவட்ட வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுடன் மைத்திரிபால தலைமையிலான பொது எதிரணியினர் சந்திப்பை நடத்துவர்.
இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Post a Comment