Header Ads



எருமை மாட்டுடன் மோதிய விமானம் - விசாரணைக்கு உத்தரவு

இந்தியா - குஜராத் மாநிலம் சூரத் விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஓடுதளத்தில் எருமை மாடு மீது மோதி விபத்துக்குள்ளானது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

சூரத் விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 140 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் போயிங் விமானம், மெலெழும்புவதற்கு சில வினாடிகளுக்கு முன்னதாக ஓடுபாதையில் வந்த எருமை மாடு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு வேறொரு விமானத்தில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

விமானம் மோதியதால் எருமை மாடு இறந்தது. காம்பவுண்டு சுவரில் உள்ள இடைவெளி வழியாக எருமை மாடு ஓடுபாதைக்குள் நுழைந்துள்ளது.

இந்த விபத்து குறித்து விமான போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் மற்றும் விமான நிலையங்கள் ஆணையம் தனித்தனியாக விசாரணை நடத்த விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மந்திரி அசோக் கஜபதி ராஜு இன்று காலை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அனைத்து விமான நிலையங்களிலும் கான்கிரீட்டால் ஆன காம்பவுண்ட் சுவர்கள் அமைக்க உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.