கட்சி பணத்தை மேக்கப்புக்கு செலவழித்த அமைச்சர்
கட்சிக்காக வாங்கிய நன்கொடைகளை, தனது மேக்கப் மற்றும் அழகு சாதன பொருட்களை வாங்க பயன்படுத்தியதாக ஜப்பானின் பெண் அமைச்சர் மீது குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.ஜப்பானில் பிரதமர் ஷின்சோ அபே தலைமையில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் சுதந்திர ஜனநாயக கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது அமைச்சரவையில் 40 வயதான யூகோ ஒபுச்சி தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.யூகோ ஒபுச்சியின் திறமையான நிர்வாக நடவடிக்கையினால், ஜப்பானில் தொழில், வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்றம் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் யூகோ ஒபுச்சிக்கு கேபினட் அந்தஸ்தை அளித்தார் பிரதமர் ஷின்சோ அபே.
இதற்கிடையே, கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது அபேவின் கட்சிக்கு ஏராளமான நன்கொடைகள் குவிந்தன. யூகோவின் மத்திய ஜப்பான் தொகுதியில் ரூ.58 லட்சம் நன்கொடை அளிக்கப்பட்டு இருந்தது. அந்த நிதியை தனது மேக்கப் மற்றும் ஏராளமான அழகு பொருட்களை வாங்குவதற்கு பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.இதைத் தொடர்ந்து, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தலைமையில் நேற்று டோக்கியோவில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் யூகோ ஒபுச்சி தன்மீதான குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவரது ராஜினாமா கடிதத்தை பிரதமர் அபே ஏற்றுக்கொண்டதாக ஜப்பானில் இருந்து வெளியாகும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுஉள்ளன.
Post a Comment