Header Ads



முஸ்லிம்கள் பௌத்தத்தை அழிக்கின்றனர் - கொழும்பில் அசின் விராது புலம்பல்


முஸ்லிம் அடிப்படை வாதம் பௌத்தத்தை அழிக்கின்றது. பௌத்தர்களைப் பாதுகாக்காது போனால், அவர்களின் கடைசித் தருணம் இதுவாகும் என மியன்மாரின் சர்ச்சைக்குரிய அசின் விராது தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு சுகததாச விளையாட்டு உள்ளகரங்கில் நடைபெற்றுவரும் பொதுபல சேனாவின் இன்றைய 28-09-2014 பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது விசாவை இரத்து செய்வதற்கு இலங்கை முஸ்லிம் அடிப்படைவாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளுக்கும் மத்தியில், இந்நாட்டுக்கு வருகைதர விசாவை வழங்கிய இந்நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பௌத்தர்கள் இன்று உலகில் மிகப் பயங்கரமான ஒரு நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளனர். பௌத்தர்களுடைய அகிம்சைப் போக்கை ஒரு பலஹீனமாகப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை மதம் மாற்றுதல், பௌத்த விகாரைகளை அழித்தொழித்தல், மகா சங்கத்தினரை அபகீர்த்திக்கு உள்ளாக்குதல் போன்ற செயற்பாடுகளில் ஜிஹாத் பயங்கரவாதம் செயற்பட்டு வருகின்றது.

ஒருவரை ஒருவர் கொன்று குவிக்கும் முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு உலக ஊடகங்கள் அமைதியன ஒரு போக்கைக் கைக்கொண்டு வருகின்றன.

ஊடகங்களையும், பொருளாதாரத்தையும், தொழில்நுட்பத்தையும் கையில் ஏந்திய உலக சக்திகள் பௌத்தர்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றன.

ஜிஹாத்வாதிகளினால் உலக பௌத்த கருத்துக்களுக்கு தவறான விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. அடிப்படைவாத கொலைகாரர்களை நிரபராதிகளாகவும், அகிம்சை வழியில் செல்லும் பௌத்தர்களை குற்றவாளிகளாகவும் புடம்போட்டுக்காட்ட இந்த அடிப்படைவாதிகள் முயற்சிக்கின்றனர்.

இந்த அனைத்துக்கும் பின்னால் ஜிஹாத்வாதிகளும் அவர்களின் பின்னால் உள்ள ஊடகங்களும்தான் இருக்கின்றன.

சர்வதேச ரீதியில் பார்க்கும் போது பௌத்தர்கள் சிறுபான்மையினராகவே உள்ளனர். இந்த சிறு தொகையினரை நாம் பாதுகாக்கத் தவறினால், இது பௌத்தர்களின் கடைசித் தருணம் என்பதை நினைவுபடுத்துகின்றேன்.

எமது பௌத்த குடும்பங்கள் முக்கிய அங்கமாகும். அதனை பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்தக் காரியங்களை நிறைவேற்றுவதற்கும் உலக பௌத்தர்களின் பாதுகாப்புக்காகவும் இலங்கையில் செயற்படும் பொதுபல சேனாவுடன் எனது 969 எனும் அமைப்பு கைகோர்த்து செயற்பட்டு வருகின்றது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

இறுதியாக நாட்டைக் கட்டியெழுப்பும் மகாசங்க ஒன்றுகூடலில் கலந்து கொள்வதற்கு எனக்கு அழைப்பு விடுத்த பொதுபல சேனா அமைப்புக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன், இந்த உலகம் பௌத்த அகிம்சைவாதிகளின் அதிகாரத்தின் கீழ் சமாதான உலகமாக மாறட்டும் என பிராத்திக்கின்றேன் எனவும் அசின் விராது தேரர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.