Header Ads



''முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்காமல் போனமைக்கான பாவத்தை செய்தவர் ரவூப் ஹக்கீம்'''

அமைச்சர் ரவூப் ஹக்கீமே முஸ்லிம்களுக்கு நீதி நியாயம் கிடைக்காமல் போனமைக்கான பாவத்தை செய்தவர்  என ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நேற்று பாராளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் சபையில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

அளுத்கம, பேருவளையில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் முஸ்லிம் மக்களுக்கு நீதி நியாயம் கிடைக்கவில்லை என்றும் எனவே முஸ்லிம்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்காக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப் போவதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.

முஸ்லிம்களுக்கு நீதி நியாயம் கிடைக்காமைக்கான முழுப்பொறுப்பையும் அமைச்சர் ரவூப் ஹக்கீமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

17வது திருத்தத்தை ஐ.தே.கட்சி உட்பட சபையில் 224 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் நீதித்துறை பொலிஸ் அரச சேவைகள் என அனைத்திற்கும் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.

இவ்வாறானதொரு நிலையில் நீதித்துறையில் சுயாதீனம் காணப்பட்டது. ஆனால் இந்த 17வது திருத்தத்தை இல்லாதொழித்து சுயாதீன ஆணைக்குழுக்களை இல்லாது செய்து 18வது திருத்தத்திற்கும் அரசாங்கத்திற்கும் ஆதரவு வழங்கி அதனை நிறைவேற்ற அமைச்சர் ரவூப் ஹக்கீமே ஆதரவு வழங்கினார்.

இதனால் இன்று சட்டமா அதிபர் உயர் நீதிமன்ற நீதிபதிகள், இராணுவத் தளபதி உட்பட அரச உயர் பதவிகளுக்கு ஜனாதிபதியே நியமனங்களை வழங்கும் நிலைமை உருவானது.

ஆனால் 17வது திருத்தம் நடைமுறையில் இருந்த போது இவ்வாறான அரச உயர் பதவிகளுக்கு ஜனாதிபதியினால் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டாலும் அதனை நிராகரிக்கவும் வேறொருவரின் பெயரை பரிந்துரைக்கவுமான அதிகாரம் அரசியலமைப்பு சபைக்கு இருந்தது. ஆனால் 18வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதோடு இந்நிலை மாறி அனைத்தும் ஜனாதிபதியின் கைகளில் சிக்கிக்கொண்டது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கு நீதி நியாயம் கிடைக்கவில்லை என அமைச்சர் ஹக்கீம் சொல்வதால் எந்தப் பயனும் இல்லை. ஏனென்றால் முஸ்லிம்களை இந்த நிலைக்கு தள்ளிவிட்ட பாவத்தை செய்தவர் ரவூப் ஹக்கீமே என்றார்.

1 comment:

  1. எதிர்வரும் தேர்தலில் ஹக்கிமுக்கு வாக்குகள் விழக்கூடாது என்பதால் இவர் இப்படி சொல்கின்றாரா? அல்லது ஹக்கீமும் தவறிழத்துவிட்டாரா?
    முஸ்லிம்களோட வாக்குகள் இனிமேலும் கலைந்து சின்னாபின்னமாகக்கூடாது. நாம் ஒன்று சேர்ந்து நிற்பதன் மூலம் மட்டுமே எமது குரலே மேம்படச்செய்யலாம்.
    அவ்வளவு கொடுமையையும் செய்த்துவிட்டு அழிவுக்குக்காரணம் முஸ்லிம்கள்தான் என்று சிலர் சொல்லித்திரிவது முஸ்லிம்கள்மீது அவர்கள் கொண்டுள்ள காழ்ப்புணர்வின் உச்சத்தையே வெளிக்காட்டுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.