Header Ads



மனிதர்களை புனிதர்களாக வாழ்விப்பதற்கே மதம் தேவை, கொன்று குவிப்பதற்கல்ல..!!


(கலாநிதி மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)

தனிமனிதாக,குடும்பமாக,சமூகமாக,தேசமாக,உம்மத்தாக,சர்வதேசமாக மனிதன் வாழ்வதற்கே காலத்திற்குக் காலம் நபிமார்களும், தூதுவர்களும், இறை தூதுகளுடன் அருளப்பட்டனர்.

ஆன்மீக பயிற்சிகள் ஆயினும்,அகீதத் ஆயினும் ஷரீஅத் ஆயினும் கிலாபாத் ஆயினும் அவை குறித்த பிக்ஹு அல்லது இஜ்திஹாது எல்லாமே மறுமைக்கான விளைநிலமான இன்மை வாழ்வில் மனிதனின் உயிரிலும் மேலான தீன்,உயிர்,அறிவு,உடைமைகள்,பரம்பரை என்ற அடிப்படை அம்சங்களை மையப் படுத்தியதாகவே அமைந்திருக்கின்றன.

காலத்திற்குக் காலம் நபிமார்கள்,தூதுவர்கள், இறுதி இறைதூதர் முஹம்மத் (ஸல்)அவர்கள் சஹாபாக்கள், தாபிஈன்கள் அவர்கள் பின் வந்த நல்லடியார்கள் மனித வர்க்கத்திற்கு தத்தமது பங்களிப்பை செய்திருக்கின்றார்கள்.

இறைவன்,பிரபஞ்சம்,உலகம்,வாழ்வு,மரணம்,இன்மை மறுமை குறித்த மிகவும் தெளிவான கோட்பாட்டுச் சிந்தனைகளை கொண்டுள்ள சிறந்த ஒரு உம்மத் நவீன உலகிற்கு இஸ்லாம் குறித்த எத்தகைய நடை முறை வியாக்கியானங்களை தனி மனிதர்களாகவும், குடும்பங்களாகவும், சமூகங்களாகவும், தேசங்களாகவும், உம்மத்தாகவும் முன்வைத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதே ஒவ்வொரு விசுவாசியினதும் ஆன்மாவை ஆட்டிப் படைக்கின்ற, உள்ளத்தை உறுத்துகின்ற கேள்வியாகும்.

இஸ்லாத்தின் பெயரால், ஷரீஅத்தின் பெயரால், அகீதாவின் பெயரால், கிலாபாத்தின் பெயரால், ஆன்மீகநெறிமுறைகளின் பெயரால் மொத்தத்தில் மதத்தின் பெயரால் வெவ்வேறு முரண்பாட்டு முகாம்களுக்குள் சிக்கி சின்னாபின்னப்பட்டு இன்மை மறுமை வாழ்வின் அத்துணை இலக்குகளையும் தொலைத்துக் கொண்ட ஒரு உம்மத்தாக, இஸ்லாத்தின் எதிரிகளை உள்வீட்டில் வைத்து போஷிக்கும் ஒரு உம்மத்தாக அவர்களின் நலன்களுக்கேற்பவே நகர்த்தப் படும் முகாம்களாக நாம் மாறி வருகின்றோம்.

இஸ்லாத்தையும் முஸ்லிம் இளைஞர்களையும் இலக்கு வைத்து சத்தியத்தின் கோலம் கொண்டு, சத்தியத்தின் சுலோகங்கள் சுமந்து சதி வலைகளை விரித்துள்ள பரந்து விரிந்த சியோனிஸ மற்றும் மேலைத்தேய மேலாதிக்க சக்திகளிடமிருந்தும் முஸ்லிம் உலக முகவர்களிடமிருந்து காப்பாற்றுகின்ற மிகப் பெரும் பாரதூரமான பணி நாம் கடந்த பல தசாப்தங்களாக கொண்டிருந்த செயற்பாட்டு இலக்குகளை, கோட்பாடுகளை காலாவதியாக்கியுள்ளன.

No comments

Powered by Blogger.