'கிராமத்தில் காவி உடையைத் துறந்து, பின் கொழும்பில் தாமாகவே அதை அணிந்தவரே ஞானசாரர்'
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். தமக்கு எதிராக ஞானசார தேரர் சுமத்திய குற்றச்சாட்டுக்களை முற்று முழுதாக நிராகரிப்பதாகவும் இது அடிப்படையற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் போதைப் பொருள் விற்பனை செய்வதாகவும், கேரள கஞ்சா விற்பனை செய்வதாக சுமத்திய குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிராமத்தில் காவி உடையைத் துறந்து பின்னர் கொழும்பிற்கு வந்த தாமே மீண்டும் காவி உடையை அணிந்து கொண்டவரே இந்த ஞானசார தேரர் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஞானசார தேரர் தமக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டுக்களை முடிந்தால் நீதிமன்றில் நிரூபிக்கட்டும் என அவர் தெரிவித்துள்ளார். தாம் பி.எம்.டபிள்யூ கார் ஒன்றில் கேரள கஞ்சா போதைப் பொருள் கடத்தி வருவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை முடிந்தால் நிரூபிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார். தம்மிடம் உத்தியோகபூர்வ வாகனமொன்று மட்டுமே காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment