கடித்து குதறிய முதலையுடன், போராடி உயிர் பிழைத்த சிறுவன்..!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஏரியில் குளித்துக் கொண்டிருந்த 9 வயது சிறுவனை பெரிய முதலை கவ்வி பிடித்தது. அந்த முதலையுடன் போராடி சிறுவன் உயிர் பிழைத்தான்.
அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் நகரை சேர்ந்த 9 வயது சிறுவன் ஜேம்ஸ் பார்னி. இவன், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்குள்ள ஏரிக்கு குளிக்க சென்றான். ஏரியில் நீந்திக் கொண்டிருந்த போது, 9 அடி நீளமுள்ள முதலை ஒன்று இவனை பின்பக்கமாக கவ்வியது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன், முதலையின் பிடியில் இருந்து விடுபட போராடினான். தன் பலம் முழுவதையும் திரட்டி முதலை மீது பல முறை குத்தினான். அப்போது அதன்பிடி சற்று விடுபட்டது. இதை பயன்படுத்தி கரையை நோக்கி வேகமாக நீந்தினான். ‘உதவி.. உதவி..‘ என சிறுவன் கூச்சலிட்டபடி வந்ததை சிலர் பார்த்து ஏரியில் இறங்கி அவனை மீட்டனர். முதலை கடித்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
அவனது உடலில் முதலையின் 30 பல் தடங்கள் பதிந்து இருந்தன. ஒரு பல்லும் ஒட்டி இருந்தது. அதனை ஆபரேஷன் மூலம் டாக்டர்கள் அகற்றினர். முதலையிடம் சிக்கியது குறித்து சிறுவன் கூறுகையில், எனது முதுகு பக்கத்தில் முதலை கடித்தது. நானும் அந்த முதலையுடன் நீண்ட நேரம் போராடினேன். எனக்கு பின்பக்க தொடை, வயிறு மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. எனது உடலில் பதிந்திருந்த முதலையின் பெரிய பல்லை டாக்டர்கள் அகற்றி உள்ளனர். நான் அந்த பல்லை சங்கிலியில் கோர்த்து மாலையாக போட்டுக் கொள்ள போகிறேன் என்றான்.

Post a Comment