யானை தாக்கி வயோதிபப் பெண் பலி, பார்க்கச்சென்ற உறவினர்கள் எருமை மாட்டில் மோதி விபத்து
(tL)
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மரப்பாலம் கிராமத்தில் இன்றையதினம் அதிகாலை காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த வயோதி பெண்ணின் மரண வீடுக்கு சென்ற உறவினர்கள் பயணித்த கன்டர் வாகனம் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
மரப்பாலம் கிராமத்தில் இன்றையதினம் அதிகாலை காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி ஜோசப் நாகம்மா (வயது 65) என்பவர் உயிரிழந்தார்.
இன்று திங்கட்கிழமை அதிகாலை யானையின் சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே ஒடிவந்தபோதே குறித்த பெண்ணை யானை தாக்கியுள்ளதுடன் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கரடியனாறு வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் இந்த சம்பவத்தை கேள்வியுற்று இவரது வவுணதீவிலுள்ள உறவினர்கள் கன்டர் வாகனம் ஒன்றில் மரப்பாலம் கிராமத்துக்கு வந்துகொண்டிருந்தபோது மேற்படி பகுதியில் வீதிக்கு குறுக்கே பாய்ந்த எருமையுடன் வாகனம் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது அதில் பயணித்த அன்ரனி மரியதாஸ் (வயது 30), அன்ரனி மனோரஞ்சிதம் (வயது 55), இந்திரநாதன் மனோன்மணி (வயது 52), சதாசிவம் இந்திரநாதன் (வயது 56) ஆகியோர் சிறு காயங்களுக்குள்ளானதாகவும் கரடியனாறு வைத்தியசாலை வட்டாரங்க்ள தெரிவித்தன.
இந்த விபத்து காரணமாக மோதிய எருமை மாடு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இன்று மரப்பாலம் கிராமத்தில் யானை தாக்கி உயிரிழந்த வயோதிப பெண்ணின் வீட்டு வளவில் இருந்து செயலிழந்த மிதிவெடியொன்றினை மீட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வயோதிப பெண்ணின் வளவினுள் உள்ள மாமரத்துக்கு அருகில் இருந்து இந்த வெடி பொருள் மீட்கப்பட்டதாகவும் அவை செயலிழந்த நிலையில் இருந்ததாகவும் தெரியவருகின்றது.
.jpg)
Post a Comment