Header Ads



'லைலத்துல் கத்ர்' நன்மைகள் சம்பாதிக்கும் ஒரு இரவு

நஸ்லின் றிப்கா அன்சார் 
பிரதி அதிபர்
அல்-ஹிலால் வித்தியாலயம், சாய்ந்தமருது

'இந்த அல்;குர்ஆனை மகத்துவமிக்க இரவில் நாம் இறக்கினோம். மகத்துவமிக்க இரவைப்பற்றி உமக்குத்தெரியுமா? அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிட சிறந்ததாகும்.'(அல்குர்ஆன் 97;: 1-3) 

இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை இவ்வருடமும் நாம் அடைந்திருப்பது அல்லாஹ் நமக்களித்திருக்கும் மிகப்பெருங் கொடையாகும். ஏனெனில் சென்ற வருடம் எம்மோடிருந்த எமது பல உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்த சகோதர, சகோதரிகள் இன்று எம்மோடு இல்லை. அதாவது பல சிறப்பம்சங்களையும், தனித்துவங்களையும் தன்னகத்தே கொண்ட இந்தப்புனித ரமழான் மாதத்தினை அடைந்து கொள்ளும் பாக்கியம் அவர்களுக்கு கிட்டவில்லை. ஆனால், எங்களுக்குக் கிடைத்திருக்கின்றது.

அதிலும் விசேடமாக, ஆயிரம் மாதங்களை விடவும் சிறப்பானது என்று கூறப்படுகின்ற புனிதமான லைலத்துல் கத்ர் அதாவது எங்களைத் தூய்மைப்படுத்தக்கூடிய அந்த இரவு இந்த ரமழான் மாதத்திலேயே காணப்படுகின்றது. இன்ஸாஅல்லாஹ் அந்த மகத்துவமிக்க இரவை அடையும் பாக்கியமும் எமக்கு கிடைக்கலாம், ஒருவேளை கிடைக்காமலும் போகலாம். அந்த இரவை அடைந்து கொள்வதற்கும் நாங்கள் கொடு;த்து வைத்திருக்க வேண்டும். அதற்கான காரணம் யாதெனில், பல வருடங்கள் முயற்சித்துக் கிடைக்கின்ற நன்மைகளை விடவும் அதிகமான நன்மைகளை அந்த ஒரு இரவில் மட்டும் நாங்கள் செய்கின்ற நல்லமல்கள், வணக்கவழிபாடுகள் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

பொதுவாக அந்த இரவை ரமழானின் இருபத்தேழாவது இரவிலேயே எதிர்பார்த்து எமது அமல்களைப் புரிந்தாலும், இருக்கின்ற ஆதாரங்களின் அடிப்படையில், அது ரமழானின் இறுதிப் பத்து நாட்களில் ஒரு இரவாகவே அமையும். இதிலே வாதப்பிரதிவாதங்கள் இருந்தாலும், அந்த இரவைப் புனித ரமழான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களிலும் தேடி, அந்தப் பாக்கியத்தை அடைந்து கொள்வதே சிறப்பானதும், உசிதமானதுமாகும். 
மேலும் லைலத்துல் கத்ர் இரவு பல சிறப்பம்சங்கள் நிறைந்ததாக காணப்படுகின்றது.

1. அல் குர்ஆன் இறக்கப்பட்ட இரவு
லைலத்துல் கத்ர் இரவிலேயே குர்ஆன் இறக்கப்பட்டது என்பது பற்றி இரண்டு வி;டயங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவதாக  குர்ஆன் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில்; லைலத்துல் கத்ர் இரவில்  இறக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது.
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம் (அல்குர்ஆன் 97: 1)

அடுத்து முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முதல் முதலாக அல்குர்ஆன் அருளப்பட ஆரம்பித்ததும் இவ்விரவிலேயே என்றும் கூறப்படுகின்றது. 
படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! (அல்குர்ஆன் 96: 1)
இவ்வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட முதல் வசனமாகும். இந்த வசனம் லைலத்துல் கத்ரு எனும் இரவில்தான் அருளப்பட்டதாகும்.
பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்நாளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப ஒரு வசனமோ, அல்லது சில வசனங்களோ, அல்லது ஒரு முழு அத்தியாயமோ அருளப்பட்டது.
(முஹம்மதே!) நாமே உமக்கு இக்குர்ஆனைச் சிறிது சிறிதாக அருளினோம். (அல்குர்ஆன் 76: 23)
திருக்குர்;ஆன் சிறிது சிறிதாகவே அருளப்பட்து என்பதை இவ்வசனம்; தெளிவுபடுத்துகின்றது.

2. ஆயிரம் மாதங்களைவிட சிறந்த இரவு
(இந்த அல்குர்ஆனை) மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித்தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹூம் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறைவரை இருக்கும்.(97: 1-5)

ஆயிரம் மாதங்கள் என்பது சுமார் 83 வருடங்களும் 4 மாதங்களும் ஆகும். ஆகவே இவ்விரவில் செய்யப்படும் நன்மை சராசரி மனித ஆயுளையும் விட அதிகமான ஆண்டுகளின் நன்மையை அளிக்க வல்லது என்பதை சிந்திக்க வேண்டும்.

3 .  அது எந்த இரவில் ஏற்படும்
லைலத்துல் கத்ர் இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்த கண்ணியமும், மகத்துவமும் மிக்க இரவு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் பிறை 27ல் தான் என்று குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ ஆதாரபூர்வமாக காட்ட முடியாது. மாறாக ரமளான் மாதத்தின் கடைசிப்பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் (பிறை 21,23,25,27,29) ஆகிய இந்த ஐந்து இரவுகளில் அமைந்திருக்கலாம் என்பதுதான் ஹதிஸ்களிலிருந்து பெறப்படும் உண்மையாகும்.

'ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்;;: புஹாரி,முஸ்லிம், திர்மிதி - 722)

உபாதத் பின் ஸாமித் (ரழி) அவர்கள் கூறியதாவது: லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன். அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே அது பற்றிய விளக்கம் நீக்கப்பட்டு விட்டது. அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம். எனவே அதை இருபத்தொன்பதாம் இரவிலும் இருபத்தேழாம் இரவிலும் இருபத்தைந்தாம் இரவிலும் இருபத்திமூன்றாம் இரவிலும் தேடுங்கள் எனக் கூறினார்கள். (நூல்: ஸஹீஹுல் புஹாரி 2023) 
மேற்கண்ட ஹதீஸ்கள் ரமழானின் கடைசி பத்து நாட்களில் லைலத்துல் கத்ர் இரவு இருக்கிறது என்பதை தெரிவிக்கிறது. 'லைலத்துல் கத்ர் இரவை ரமழானின் கடைசிப்பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் நீங்கள் தேடுங்கள்' என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), நூல்: புகாரி 2017)
இந்த ஹதீஸில் ரமழானின் கடைசிப்பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் அது இருக்கிறது என்றும் மேலும் சில ஹதீஸ்களில் குறிப்பிட்ட நாளின் இரவில் அது இருக்கிறது என்றும் வந்துள்ளது. இருந்தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் மறந்துவிட்டதால் ரமழானின் கடைசிப்பத்து நாட்களில் தேடுவதே சிறந்ததாகும்.

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது நபி (ஸல்) அவர்கள் ரமழானின் கடைசிப்பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள். ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள் எனக் கூறுவார்கள். (நூல்- ஸஹீஹுல் புஹாரி- 2020)

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ரமழானின் இறுதிப்பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள். அதாவது லைலத்துல் கத்ரை இருபத்தொன்றாவது இரவில், இருபத்து மூன்றாவது இரவில், இருபத்து ஐந்தாவது இரவில் தேடுங்கள்;. இதை அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்- ஸஹீஹுல் புஹாரி 2021)

நபி (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவு பற்றி ஏதேனும் கூறியதை நீங்கள் கேட்டீர்களா? என்று அபூ ஸயீத் (ரழி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர், 'ஆம்' நாங்கள் ரமழானின் நடுப்பத்து நாள்களில் நபி(ஸல்)அவர்களுடன் இஃதிகாப் இருந்தோம். இருபதாம் நாள்; காலையில் வெளியேறினோம். இருபதாம் நாள்; காலையில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில், 'எனக்கு லைலத்துல் கத்ர் காட்டப்பட்டது. அதை நான் மறந்துவிட்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாள்களின் ஒற்றை இரவுகளில் தேடுங்கள். அன்று ஈரமான களிமண்ணில் நான் ஸஜ்தாச் செய்வது போல் கனவு கண்டேன். யார் அல்லாஹ்வின் தூதருடன் இஃதிகாப் இருந்தாரோ அவர் பள்ளிக்குத் திரும்பட்டும்' எனக் கூறினார்கள். மக்கள் பள்ளிக்குத் திரும்பினார்கள். அப்போது வானத்தில் சிறு மேகத்தைக் கூட நாங்கள் காணவில்லை. திடீரென மேகம் வந்து மழை பொழிந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ஈரமான களிமண்ணில் ஸஜ்தாச் செய்தார்கள். அவர்களின் நெற்றியிலும் மூக்கிலும் களிமண்ணை கண்டேன்' என்று விடையளித்தார். (நூல்: புகாரி 2016) 

எனவே இந்த லைலத்துல் கத்ர் இரவை கடைசிப்பத்தில் ஒற்றைப்படை இரவில் தேடுவதே மிகச் சிறந்ததாகும். அதையே நபி (ஸல்) அவர்கள் செய்து காட்டியும் வலியுறுத்தியும் உள்ளார்கள்.

4. லைலத்துல் கத்ர் இரவில் வணக்க வழிபாடு
 'ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தினரை (வணக்கத்தில் ஈடுபடுவதற்காக) விழித்திருக்கச் செய்வார்கள்' இதை அலி (ரழி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: திர்மிதி 725, அஹ்மது)

 'நபி (ஸல்) அவர்கள் மற்ற எந்த நாட்களிலும் வணக்கத்தில் ஈடுபடாத அளவுக்கு ரமழானின் பிந்திய பத்துகளில் வணக்கத்தில் ஈடுபடுவார்கள்'. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) ஆதார நூல்: முஸ்லிம்)
லைலத்துல் கத்ர் இரவுக்கென்று நபி(ஸல்) அவர்கள் எந்தவொரு பிரத்தியேகத் தொழுகையையும் காட்டித் தரவில்லை. அவ்வாறு பிரத்தியேகத் தொழுகை எதுவும் இல்லை என்பதற்கு கீழ்க்காணும் ஹதீஸே போதிய ஆதாரமாகும். 
'ரமழானில் நபி (ஸல்) அவர்கள் தொழகை எவ்வாறு இருந்தது என்று நான் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் கேட்டபோது, ரமழானிலும் ரமழான் அல்லாத மாதங்களிலும் நபி (ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாக தொழுததில்லை என்று விடையளித்தார்கள்' (அறிவிப்பவர்: அபூஸலமா (ரழி) ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், நம்மால் ஏவப்படாத செயலை மாரக்கம் என்ற பெயரில் எவரேனும் செய்வார்களேயானால் அது நிராகரிக்கப்படும்.(அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி)ஆதாரம்: முஸ்லிம்)

மேலும் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள், வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வாரத்தையாகும், நடைமுறையில் சிறந்தது என்னுடைய நடைமுறையாகும், மாரக்கம் என்ற பெயரில் புதிதாக உருவாகும் ஒவ்வொரு செயல்களும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஓவ்வொரு வழிகேடும் நரகில் கொண்டு சேர்க்கும்.(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி) ஆதாரம்: புஹாரி)
   
ரமழானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள். இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) ஆதார நூல்: புகாரி 2024, முஸ்லிம்)

 'நபி (ஸல்) அவர்கள் மற்ற நாட்களில் முயற்சிக்காத அளவு கடைசிப் பத்து நாட்கள் முயற்சிப்பார்கள்' என்று ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: இப்னு மாஜா, அஹ்மது, திர்மிதி 726)

எனவே இந்நாட்களில் நாமனைவரும் நன்மைகளை கொள்ளையடிப்பவர்களாக அதிகமதிகம் வணக்க வழிபாடுகளில்; ஈடுபடவேண்டும். இதை மறந்தவர்களாக முஸ்லிம்கள் பலர் வாழும் நிலை, குறிப்பாகக் கடைசிப்பத்து நாட்களில் தமது பொன்னான நேரத்தை இவற்றை விடவும் அதிகமாக இதர அலுவல்கள், பெருநாளின் தேவைகள் போன்ற வேலைகளில் ஈடுபட்டு அசதியுடன் வீடு திரும்பி இரவுத் தொழுகைகள், பஜ்ரு தொழுகைகள், ஸஹர், லைலத்துல் கத்ர் எனும் மகத்தான இரவு போன்ற அனைத்தையும் தவறிவிடும் நிலையையும் காணமுடிகிறது. அவையெல்லாம் லைலத்துல் கத்ரு என்னும் இந்தப் பொன்னான வாய்ப்பை இழக்கவைக்க முஸ்லிம்களுக்கு எதிரான ஷைத்தானின் முயற்சி என்றால் அது மிகையாகாது.   

5. (இஃதிகாப்) பள்ளியில் தங்குதல்
இஃதிகாப் என்ற அரபி வாரத்தைக்கு 'தங்குதல்' என்ற பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் பள்ளியில் நன்மையை எதிர்பார்த்துத் தங்குவதற்கு இஃதிகாப் என்று சொல்லப்படும்.

நபி (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இஃதிகாப் இருந்துள்ளார்கள். நபித்தோழர்களும் இருந்துள்ளனர்.
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக இருக்கும் லைலத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும். வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுத்து வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத்தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் பஜ்ரு தொழுகையை முடித்து விட்டு இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள். (நூல்: முஸ்லிம் 2007)
இஃதிகாப் இருக்க நாடுபவர், 20ம் நாள் காலை சுப்ஹுத் தொழுது விட்டு இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் சென்று விட வேண்டும்.
 'நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் மரணிக்கச் செய்யும் வரை ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருந்து வந்தார்கள்'. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), நூற்கள்: திரமிதி 720, அஹ்மது)

அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தின் கடைசி பத்து நாட்களிலும் பள்ளியில் தங்கி இருந்து, மற்ற நாட்களை விடவும் அதிகமான அளவு வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டார்கள்.
மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்கும்N;பாது (மிக முக்கியமான அவசியத் தேவைகளைத் தவிர) பள்ளியைவிட்டு வெளிவரமாட்டார்கள் என்பது தெளிவாகிறது. 

பள்ளியில் தங்கியிருக்கும்போது (இஃதிகாப்) அனுமதிக்கப்படாதவை பற்றி அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
'நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாப்) இருக்கும் போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்' (அத்தியாயம் 2 ஸுறத்துல் பகரா – 187 வது வசனத்தின் ஒரு பகுதி) 

இஃதிகாப் இருப்பவர் ரமழான் மாதம் முடிந்தால் அன்றைய மஃரிப் தொழுகைக்குப் பிறகு (அதாவது ஷவ்வால் பிறை தென்பட்ட இரவில்) இல்லம் திரும்பலாம்.

6. இரவு வணக்கமும் பாவமன்னிப்பும்:
 'அல்லாஹ்வின் திருத்தூதர், அண்ணல் நபி(ஸல்) அவர்கள் (ரமழானின்) பிந்திய பத்து இரவுகள் வந்ததும் வணக்கத்தில் ஈடுபட முழுமையாக ஆயத்தமாகி விடுவார்கள். இரவை வணக்கத்தில் கழிப்பார்கள். தனது குடும்பத்தையும் விழிக்கச் செய்வார்கள்' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) ஆதார நூல்கள்: புஹாரி,முஸ்லிம்)
மேற்கண்ட ஹதீஸிலிருந்து அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ரமழானின் பிந்திய பத்து இரவுகளில் முன்னெப்போதையும் விட அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள் என்பது தெளிவாகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 'யார் ரமழானில் நம்பிக்;கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். யார் லைலத்துல் கத்ர்-கண்ணியமிக்க இரவில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ அவர் அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். இதை அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் : ஸஹீஹுல் புஹாரி 2014)
மேலும் இத்தகைய சிறப்பு வாய்ந்த லைலத்துல் கத்ர் உடைய இரவில் நின்று வணங்கியும் குர்ஆன் ஓதியும் திக்ரு செய்தும் நம்முடைய அமல்களை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். வீணாண பேச்சுக்கள், சண்டை சச்சரவுகள் இவற்றை அறவே தவிர்த்துக் கொண்டு இறைவனிடம் அதிகமதிகம் பாவமன்னிப்பு கோர வேண்டும்.

7. லைலத்துல் கத்ரின் துஆ:
 'அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல் கத்ர் எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்? என்று கேட்டேன். அதற்கு, 'அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வஃபஃபுஅன்னி'(யா அல்லாஹ! நீ மன்னிக்கக் கூடியவன். முன்னிப்பை விரும்புபவன். என்னை நீ மன்னித்து விடு!) என்று கற்றுக் கொடுத்தார்கள்'.என்று ஆயிஷா (ரழி)அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: அஹ்மத், இப்னு மாஜா, திர்மிதி)  

மேற்கண்ட துஆவை நாம் அதிகமதிகம் ஓதி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடி கண்ணியமிக்க ரமழானின் மகத்துவமிக்க லைலத்துல் கத்ர் உடைய இரவுகளை அடைய முயற்சி செய்ய வேண்டும். இந்த வருடம்தான் நம்முடைய கடைசி ரமழான் என்ற உள்ளச்சத்தோடு துஆ செய்வோமேயானால், அதுவே நம்முடைய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பதற்கு போதுமானதாகும். அப்படிப்பட்ட நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக!

லைலத்துல் கத்ர் இரவின் முழுமையான பயனை அடைந்து கொள்ள ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் முயற்சிப்போமாக! அதற்கு அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக!

1 comment:

Powered by Blogger.