'முஸ்லிம் அடிப்படைவாதத்தை காட்டி அரசையும், பௌத்தர்களையும் ஹக்கீம் பயமுறுத்த முயற்சி'
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஏளனம் செய்யும் கதைகளால் பௌத்த மக்களையோ, பௌத்த பிக்குகளையோ அச்சுறுத்த முடியாது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் ஊடக செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த வர்ணசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.
பிக்குமாரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் தவறினால், நாட்டுக்குள் முஸ்லிம் அடிப்படைவாதம் உருவாவதை தவிர்க்க முடியாது என முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அரசாங்கத்தின் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பௌத்தர்கள் அதிகம் வாழும் நாடுகளில் முஸ்லிம்கள் பற்றிய அச்சம் அதிகரித்து வருவதாகவும் மேற்குலக நாடுகளிலும் இப்படியான மனநிலை காணப்படுவதாகவும் கூறியுள்ள அமைச்சர் ஹக்கீம், பௌத்தர்களில் உதைக்கும் பந்தாக முஸ்லிம்கள் மாறினால், முஸ்லிம்கள் அடிப்படைவாதிகளாக மாற அது காரணமாக அமையும் எனவும் வெளிநாட்டு முஸ்லிம் அடிப்படைவாத சக்திகளுக்கு பொருத்தமான பூமியாக இலங்கை மாறும் என்றும் ஹக்கீம் மேலும் கூறியுள்ளார்.
அமைச்சர் ஹக்கீமின் இந்த மறைமுக அச்சுறுத்தல் மூலம் முஸ்லிம் அடிப்படைவாதம் என்ற பூனை பையில் இருந்து வெளியில் குதித்துள்ளது. பிக்குகளை கட்டுப்படுத்தாது போனால், முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டிற்குள் கொண்டு வரப்படும் என ஹக்கீம் கூறியுள்ளார்.
பௌத்த பிக்குகள் உட்பட பௌத்த அமைப்புகளை அடக்கி ஒடுக்குமாறு அவர் கோரியுள்ளார். தடை உத்தரவுகளை பிறப்பித்து பௌத்தர்களையும் பௌத்த பிக்குகளை உணர்வற்றவர்களாக மாற்றுமாறு அவர் கேட்டுள்ளார்.
இலங்கையில் பௌத்த பிக்குகளை அடக்கி , ஒடுக்க நாட்டை ஆட்சி செய்த மன்னர்களோ, அரசாங்கங்களோ வரலாற்றில் நடவடிக்கை எடுத்ததில்லை. காலிங்க மாகனின் ஆக்கிரமிப்பு காலம், போர்த்துகேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலங்களில் பௌத்த விரோத செயற்பாடுகளும் பௌத்த விரோத படுகொலைகளும் நிகழ்ந்தன.
இப்படியான ஒன்றையாக அமைச்சர் ஹக்கீம் அரசாங்கத்திடம் கோருகிறாரா?
பௌத்த தேரர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தாது போனால், நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாதம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்று கூறியதன் மூலம் ஹக்கீம் அரசாங்கத்தையும் பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களையும் ஏளனம் செய்துள்ளார்.
முஸ்லிம் அடிப்படைவாதத்தை காட்டி அரசாங்கத்தையும் ,பௌத்தர்களையும் ஹக்கீம் பயமுறுத்த முயற்சித்துள்ளார். ரவூப் ஹக்கீமின் புஷ் வெடிகளால், பௌத்தர்களையோ, பௌத்த பிக்குகளையோ பயமுறுத்த முடியாது எனவும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
.jpg)
Post a Comment