சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் இருந்து வீடுகளின் மீது விழுந்த உடல்கள்
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைனின் கிழக்கு பகுதியில் பக் ஏவு கணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் பலியாகினர்.
நொறுங்கிய விமானம் கிழக்கு உக்ரைனில் ரோஷிப் என்ற கிராமத்தில் விழுந்தது. அப்போது உக்ரைனில் இரவு நேரம் என்பதால் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.
விமானம் விழுந்த போது பெருத்த இடி ஓசை போன்று கேட்டதாக அந்த கிராம வாசிகள் தெரிவித்தனர். மேலும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்கள் வீட்டின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது விண்ணில் இருந்து மழை போன்று பிணங்கள் சிதறி பூமியில் விழுந்தன. விமான பயணிகளின் சிலரது உடல்கள் வீட்டு கூரைகளின் மீது விழுந்து சிதறின.
வானில் இருந்து பிணங்கள் விழுந்த வேகத்தில் சிலரது வீட்டின் கூரைகளில் பெரிய அளவில் ஓட்டை விழுந்தது. எனவே பிணங்கள் வீடுகளுக்குள் விழுந்தன. ஒரு பெண் பிணம் நிர்வாண நிலையில் தனது வீட்டின் படுக்கை அறையில் கிடப்பதாக அக்கிராமத்தை சேர்ந்த இரினா திபுனோவா என்ற பெண் தெரிவித்துள்ளார்.
இவரது வீட்டில் இருந்து 330 அடி தூரத்தில் உள்ள கோதுமை வயலில் சுமார் 35–க்கும் மேற்பட்டோரின் உடல்கள் விழுந்து சிதறி கிடந்தன. அதே நேரத்தில் பயங்கர சத்தம் கேட்டதை தொடர்ந்து கதவை திறந்து பார்த்த பெண் வானத்தில் இருந்து பிணங்கள் பறந்து வந்து தனது வீட்டு முற்றத்தில் விழுந்ததாக ஒரு இளம்பெண் கூறினார்.
இதுபோன்று பல உடல்கள் அங்குள்ள சூரிய காந்தி வயல்கள் மற்றும் காலி இடங்களில் சிதறி கிடந்தன. அவற்றை மீட்கும் பணியில் குழுக்கள் ஈடுபட்டுள்ளன. சிதைந்த உடல்களையும், எந்தவித சேதமும் இல்லாத உடல்களையும் சேகரித்து வைத்துள்ளனர்.
மீட்பு பணி இன்னும் முழுமை அடையவில்லை. விமான பயணிகளின் உடல் அனைத்தையும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Post a Comment