Header Ads



'இன ஒருமைப்பாட்டு விடயத்தில், இலங்கை அரசாங்கம் தவறிழைப்பதை ஏற்றுக்கொள்கிறேன்'

இன ஒருமைப்பாட்டு விடயத்தில் இலங்கை அரசாங்கம் தவறிழைப்பதை தான் ஏற்றுக்கொள்வதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இன்று செவ்வாய்க்கிழமை (15) தெரிவித்தார்.

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் வடமாகாணத்திற்கான மத்திய அலுவலகம் கிளிநொச்சியில் இன்று செவ்வாய்க்கிழமை (15) திறந்து வைக்கப்பட்டது. 

இந்த நிலையத்தினைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'சிங்கள பெருன்பான்மையின மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் சமூக ஒருமைப்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

அரசாங்கம் சிலவேளைகளில் இன ஒருமைப்பாட்டு விடயங்களில் தவறிழைப்பதை ஏற்றுக்கொள்கின்றேன்: என கூறினார். 

'இந்த மத்திய நிலையத்தினூடாக இன ஒருமைப்பாட்டுக்கான நிகழ்ச்சித் திட்டங்களும் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்கான நிகழ்ச்சித் திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன' என்றும் அவர் தெரிவித்தார். 

'யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகள் அதிகம் இருக்கின்றன. அவர்களின் தேவைகளை இனங்கண்டு நிவர்த்தி செய்யும் நோக்கிலே நான் வடக்கிற்கு அடிக்கடி விஜயம் மேற்கொள்கிறேன்' என அவர் மேலும் தெரிவித்தார்.

மாகாண ரீதியில் அமைக்கப்பட்டு வரும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு மத்திய நிலையங்களில், முதலாவது மத்திய நிலையமாக கிளிநொச்சியில் இன்று திறந்து வைக்கப்பட்ட நிலையம் அமையப்பெற்றுள்ளது. 

இந்த மத்திய நிலையத்தினூடாக இன நல்லிணக்கத் திட்டங்கள், சமூக நலத்திட்டங்கள், மாற்றுத் திறனாளிகள், பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்களை முன்னெடுத்து செயற்படுத்தவுள்ளது. 

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், பிரதேச செயலாளர்கள், அமைச்சின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

No comments

Powered by Blogger.