ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை ஆணையாளராக ஒருமனதாகத் தெரிவானார் செயிட் அல் ஹுசெய்ன்
ஐ.நா மனிதஉரிமை ஆணையாளராக இளவரசர் செய்ட் அல் ஹுசெய்னின் நியமனத்துக்கு ஐ.நா பொதுச்சபை ஒருமனதாக அங்கீகாரம் அளித்துள்ளது.
ஐ.நா மனிதஉரிமை ஆணையாளராக பதவி வகிக்கும் நவநீதம்பிள்ளையின் பணிக்காலம், வரும் ஓகஸ்ட் மாதம் முடிவடையவுள்ளது.
இந்தப் பதவிக்கு ஜோர்தான் நாட்டைச் சேர்ந்த இளவரசர் செயிட் அல் ஹுசெய்னின் பெயரை, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் முன்மொழிந்திருந்தார்.
நேற்று, நியுயோர்க்கில் நடந்த ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில், இந்த நியமனத்துக்கு அங்கீகாரம் கோரப்பட்ட போது, எந்த நாடும் எதிர்ப்புத் தெரிவிக்காமல் ஒருமனதாக ஆதரவு அளிக்க முன்வந்தன.
இதனால், 193 உறுப்பு நாடுகளினதும் ஒட்டுமொத்த ஆதரவுடன் செயிட் அல் ஹுசெய்னின் பதவி நியமனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது, ஜோர்தான் நாட்டின் ஐ.நாவுக்கான தூதுவராகப் பணியாற்றும் அல் ஹுசெய்ன், வரும் செப்ரெம்பர் 1ம் நாள் தொடக்கம் இந்தப் பதவியை ஏற்றுக் கொள்வார்.
ஆசயக்கண்டத்தைச் சேர்ந்த- இஸ்லாமியரான ஒருவர் ஐ.நா மனிதஉரிமை ஆணையாளராக பதவியேற்பது இதுவே முதல்முறையாகும்.

Post a Comment