Header Ads



குடும்பத் திருமணத்தில் பாலஸ்தீனம், ஹமாஸ் தலைவர்களின் சந்திப்பு


பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் அந்நாட்டு அதிபர் மஹ்மூத் அப்பாசின் ஃபட்டா இயக்கமே பெரும்பான்மை பலத்துடன் இயங்கி வருகின்றது. வெஸ்ட் பேங்க் பகுதியை ஆட்சி செய்துவரும் இந்த அமைப்பிடமிருந்த காசா பகுதியை பாலஸ்தீனத்தில் செயல்பட்டுவரும் ஹமாஸ் இயக்கம் கடந்த 2007-ம் ஆண்டில் அங்கிருந்த அதிபரின் விசுவாசமிக்க படைகளை விரட்டியடித்து கைப்பற்றியது. 

அது முதல் இரு பிரிவினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.  இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ம் தேதி பாலஸ்தீன அரசு ஹமாஸ் போராளிகளுடன் ஒரு அமைதி ஒப்பந்தத்தை மேற்கொண்டது. 

இதனால் எரிச்சலுற்ற இஸ்ரேல் பாலஸ்தீனத்துடனான தங்களுடைய அமைதிப் பேச்சுவார்த்தையைத் தடை செய்துள்ளபோதிலும் இந்த இணைப்பு மக்களிடையே சந்தோஷத்தையே ஏற்படுத்தியுள்ளது.  அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்த தங்களின் முதல் சுற்று பேச்சுவார்த்தையை நேற்று இந்த இரு தலைவர்களும் மேற்கொண்டனர். 

காசா பகுதி பிரச்சினையில் நாடு கடத்தப்பட்டிருந்த ஹமாஸ் தலைவர் எமிர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தானி சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் இருந்தபின்னர் கடந்த இரண்டாண்டுகளாக கட்டாரின் தலைநகர் தோஹாவில் வசித்து வருகின்றார். 

குடும்பத் திருமணம் ஒன்றில் கலந்துகொள்ளும் முன்பாக இவரை சந்திக்க ஞாயிறன்று பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தோஹா வந்துள்ளதாக குறிப்பிட்ட அரசு அதிகாரி ஒருவர் நேற்று இந்தத் தலைவர்கள் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது பற்றியும் குறிப்பிட்டார்.  

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் இவர்கள் இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டதாகத் தெரிவித்த ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் சமி அபு சுஹ்ரி புதிய சந்திப்பில் தங்களது சமாதான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் விதம் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்துவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.