Header Ads



மட்டக்களப்பில் வெளிநாட்டு தூதுவர்கள்..!


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்களுக்கான தூதுவர்கள், செயலாளர்கள், இராஜதந்திரிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்திய வீட்டுத்திட்டம் மற்றும் கரடியனாறு பண்ணை என்பவற்றைப் பார்வையிட்டனர்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்களுக்கான தூதுவர்கள், செயலாளர்கள், இராஜதந்திரிகள் அடங்கிய 11 பேர் கொண்ட குழு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சனிக்கிழமை (10) காலை விஜயம் செய்தனர். இதில் நான்கு வெளிநாட்டுத்தூதுவர்கள் உட்பட 4 இராஜதந்திரிகள் அடங்குகின்றனர். 

இந்தக் குழுவில், சவூதி அரேபியாவுக்கான தூதுவர் முகமட் குசைன் முகமட், ஆப்கானிஸ்தானுக்கான தூதுவர் மரிக்கார் பாவா, பிலிப்பைன்ஸ்சுக்கான தூதுவர் பேராசிரியர் எஸ்.வி.டி.காமினி சேனாநாயக்க, சிசெல் நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் டி.ராஜித பியதிஸ்ஸ, சிட்னி, கெய்ரோ, டுபாய், அம்மான் ஆகிய நாடுகளுக்கான இராஜதந்திரிகளான செல்வி. ஜாசர அபேநாயக்க, பி.கே.எம்.ஆர்.எஸ்.விஜேயரத்ன, டிலுக்சன் ஜெயசிங்க, பிரதீப் பி.மத்துமபண்ரார ஆகியோர் அடங்குகின்றனர்.

அத்துடன், இராஜதந்திரிகள் கற்கைகள் கல்லூரி பணிப்பாளர் எம்.ஆர்.கீகெல், திட்ட அதிகாரி செல்வி டேசானி மேகலா, உதவித்திட்டப் பணிப்பாளர் துமிந்த சுஜீவ ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.

மாவட்ட செயலகத்தில் காலை அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்சுடன் நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் ஏறாவூர் பற்றின் உறுகாமம் பிரதேசத்தில் நடைபெறும் இந்திய வீடமைப்பு வேலைத்திட்டம், மற்றும் கரடியனாறு விவசாயப்பண்ணை உள்ளிட்ட இடங்களையும் பார்வையிட்டதுடன், மக்களுடனும் கலந்துரையாடினர்.



களப்பயணத்தில் மட்டக்களப்பு மாவட்ட பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அமிர்தலிங்கம், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்களான ஏ.சுதாகரன், எஸ்.முரளிதரன் ஆகியோரும் இணைந்திருந்தனர்.

1 comment:

Powered by Blogger.