Header Ads



50 அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

கசினோ தொடர்பான மூன்று வர்த்தமானி அறிவித்தல்களை நிறைவேற்றும் வாக்கெடுப்பைப் புறக்கணித்த 50 அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையை நடத்த சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய கசினோ தொடர்பான மூன்று வர்த்தமானி அறிவித்தல்களை நிறைவேற்றும் வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. 

இந்த வாக்கெடுப்பில், அமைச்சர்கள் உள்ளிட்ட 50 வரையான ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. 

இது அரசாங்கத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள முதலாவது பெரும் பிளவாக இது பார்க்கப்படுகிறது. 

இந்த வாக்கெடுப்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும், ஜாதிக ஹெல உறுமயவின் அத்துரலிய ரத்தின தேரரும் அரசாங்கத்தை எதிர்த்து வாக்களித்திருந்தனர். 

அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், விமல் வீரவன்ச உள்ளிட்ட அமைச்சர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 

முன்னதாக, அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும், இந்த விவாதத்தில் கண்டிப்பாக பங்கேற்று, ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று கொரடா உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. 

அத்துடன் ஜனாதிபதி  செயலகத்தினால், தொலைபேசி மூலம் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. 

ஆனாலும், பெரும் எண்ணிக்கையான அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்திருந்தனர். 

எனினும் அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, டியூ.குணசேகர ஆகியோர் ஆதரவாக வாக்களித்திருந்தனர். 

நாடாளுமன்றத்தில் ஆளும்கூட்டணிக்கு 162 உறுப்பினர்கள் இருந்த போதிலும், 112, 113 உறுப்பினர்களே இதற்கு ஆதரவாக வாக்களித்தனர். 

இது அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள பிளவைக் காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளதால், அரசாங்க உயர்மட்டம் கடும் சீற்றமடைந்துள்ளது. 

இந்தநிலையில், வாக்கெடுப்பில் பங்கேற்காத அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறிலங்கா அதிபர் கோரியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ராஜித சேனாரத்ன, டிலான் பெரேரா, காமினி லொக்குகே, ரவூப் ஹக்கீம், எம்.எச்.எம்.பௌசி, பிறேமலால் ஜெயசேகர, றிசாட் பதியுதீன், நவீன் திசநாயக்க, மகிந்த அமரவீர, பி.தயாரத்ன, விமல் வீரவன்ச, நாமல் ராஜபக்ச, ரி.பி.எக்கநாயக்க, சுமேதா ஜெயசேன, பசீர் சேகுதாவூத், சஜின் வாஸ் குணவர்த்தன, சுதர்சினி பெர்னான்டோ புள்ளே, நியோமல் பெரேரா உள்ளிட்டோரும் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,

2 comments:

  1. இதில் இருந்து என்ன புரிகின்றது. ஆளும் கட்சியின் தீர்மானங்களை அக்கட்சியில் அங்கம் வகிக்கும் அங்காளி பங்காளிகளே வெறுக்கும் அளவிற்கு உள்ளது. இன்ஸா அல்லாஹ் வெகுவிரைவில் ஒரு நல்ல முடிவை அல்லாஹ் ஏற்படுத்துவான்.

    ReplyDelete
  2. அரசாங்கம் ஆட்டம் காணத் தொடங்கி விட்டது! விஜித ஹேரத்



    அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் வெடிக்க ஆரம்பித்து, ஆட்டம் காணத் தொடங்கி விட்டது என்பது, கசினோ சட்ட மூலத்திற்கு அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய எதிர்த்து வாக்களித்ததன் மூலம் உறுதியாகியுள்ளதாக ஜே.வி.பி.யின் பிரசார செயலாளரும் எம்.பி. யுமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

    கசினோ சூதாட்டத்தை அடிப்படையாக கொண்டு மூன்று திட்டங்களாக அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கட்டளைச் சட்ட விவாதத்தில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் எம்.பி. அதுரலிய ரத்ன தேரர் மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக ஆகியோர் எதிர்த்து வாக்களித்தமை தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    தேசப்பற்றாளர்கள் யார்? தேசத்துரோகிகள் யாரென்பதை கடந்த 24, 25 ஆம் திகதிகளில் இந்நாடே தெரிந்து கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    ReplyDelete

Powered by Blogger.