மேல், தென் மாகாண சபைகளுக்கான வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிப்பதற்கு..!
எதிவரும் 29 ஆம் திகதி நடைபெறவிருக்கும் மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிப்பதற்கு வாக்களிப்பு நிலையத்தில் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துதல் அவசியமாகும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இதற்கென பின்வரும் ஆளடையாள ஆவணங்கள் மாத்திரமே ஏற்றுக்கொளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
1. ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை,
2. செல்லுபடியாகும் கடவுச் சீட்டு,
3. செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம்,
4. அரச சேவை ஓய்வூதிய அடையாள அட்டை,
5. முதியோர் அடையாள அட்டை,
6. மத குருமார்களுக்கென ஆட்பதிவுத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை,
7. தேர்தல்கள் திணைக்களத்தின் மூலம் விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை
ஆகியவைகளில் ஒன்றை வாக்களிப்பு நிலையத்தில் தமது ஆளடையாளத்தை நிருபிப்பதற்காக ஒவ்வொரு வாக்காளரினாலும் சமர்ப்பிக்கப்படுதல் கட்டாயத் தேவையாகும்
கடந்த தேர்தல்களுக்காக விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டைகள் எதுவும் வாக்களிப்பதற்கு செல்லுபடியாகாது.
மேற்குறித்த அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒரு அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தேர்தல்கள் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் தற்காலிக அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
தேர்தல் திணைக்களத்தினால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டைகளை வழங்குவதற்காக விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை ஆகும்.
தற்காலிக அடையாள அட்டை தேவைப்படும் நபர் தனது தேசிய அடையாள அட்டை அளவுள்ள இரண்டு புகைப்படங்களுடன் பிரதேசத்தின் கிராம அலுவலரையோ தோட்டத்தை வசிப்பிடமாகக் கொண்டிருந்தால் தோட்டக்கண்காணிப்பாளரையோ சந்தித்தல் வேண்டும். எனவும் தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

Post a Comment