Header Ads



எனது அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன - சந்திரிக்கா மஹிந்தவிற்கு கடிதம்

சட்டவிரோதமான வழிமுறைகளின் மூலம் தன்னைக் கண்காணிப்பதை உடனடியாக நிறுத்துமாறு கோரி மகிந்த ராஜபக்சவுக்கு, சந்திரிகா குமாரதுங்க கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். 

இந்தக் கடிதத்தில், தான் அதிபர் பதவியில் இருந்து 2005ம் அண்டு விலகிய பின்னர், சட்டவிரோதமாக, தீவிரமாக தாம் கண்காணிக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ளார். இது தனது அடிப்படை உரிமைகளையும், தனது நடமாடும் சுதந்திரத்தையும், தனது ஒன்று கூடும் உரிமையையும் மீறுவதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் இத்தகைய கண்காணிப்பு, சட்டவிரோதமானது, அரசியலமைப்புக்கு முரணானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

2005ம் ஆண்டு ஓய்வுபெற்றது தொடக்கம்,  மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவினாலும் கட்டுப்படுத்தப்படும், அரச புலனாய்வுச் சேவைகளினால், தனது தொலைபேசி, மின்னஞ்சல் தொடர்புகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கொழும்பிலும், ஹொரகொல்லவிலும் உள்ள தனது வீடுகள் கண்காணிக்கப்படுவதாகவும், தனது வீட்டுக்கு வரும் நண்பர்கள் கண்காணிக்கப்படுவதாகவும் சந்திரிகா குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார் .

தனது வீட்டுக்கு வரும் நண்பர்கள் தேசிய புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  தன்னை சட்ட விரோதமான முறையில் கண்காணித்து வரும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

மனிதஉரிமை ஆர்வலர்கள் அச்சுறுத்தப்படுவது உள்ளிட்ட நாட்டின் மனிதஉரிமைகள் நிலை தொடர்பான விவகாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சந்திரிகா குமாரதுங்கவின் இந்தக் குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.

2 comments:

  1. Madam your letter is correct but I think the sending address is wrong.

    ReplyDelete
  2. madam suyaatcai weetpaalaraaka wawadu neengal janaadipadi veetpaalaraaka pootti idalamy

    ReplyDelete

Powered by Blogger.