ஜாதிக்க ஹெல உறுமய அனுமதிப் பத்திரங்களை விற்று சம்பாதித்த பணம் எங்கே..?
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் உதய கம்மன்பில அவுஸ்திரேலிய பிரஜை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆளும் கூட்டணி அரசாங்கம் கவிழ்ந்ததும் உதய கம்மன்பில நாட்டை அவுஸ்திரேலியாவுக்கு ஓடி விடுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துருகிரிய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தேடிக் கண்டுப்பிடிக்க எவருமில்லை. இதனால் ஜாதிக ஹெல உறுமயவின் உதய கம்மன்பில முதன்மை வேட்பாளராக நிறுத்தப்படடுள்ளார்.
கடந்த காலங்களிலும் இந்த தொகுதிக்கு வந்து மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கினர்.
நாட்டை தர்ம தீவாக மாற்ற போவதாக கூறினார்கள். ஜாதிக ஹெல உறுமயவின் 9 பேர் நாடாளுமன்றத்திற்கு சென்றதால், நாடு தர்ம தீவாகும் என்று நாங்களும் காத்திருந்தோம்.
நாட்டை தர்ம தீவாக மாற்ற போவதாக கூறி நாடாளுமன்ற சென்ற உறுப்பினர்கள் ஆரம்பத்திலேயே 9 கார்களை வரியின்றி இறக்குமதி செய்வதற்கான அனுமதிப் பத்திரத்தை பெற்றனர்.
அந்த 9 அனுமதிப் பத்திரங்களையும் 450 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்தனர். அதன் பின்னர் பௌத்த தொலைக்காட்சி ஒன்றுக்கான அனுமதிப் பத்திரத்தை பெற்றனர். அதனை நகில் விஜேசூரிய என்பவருக்கு ஆயிரத்து 250 லட்சம் ரூபாவுக்கு விற்றனர்.
சரியான கழிவறை வசதிகள் இல்லாத விகாரைகள் கடுவலை பிரதேசத்தில் இருக்கின்றன. அவற்றுக்கு ஒரு ரூபாவையும் இவர்கள் கொடுக்கவில்லை.
தற்போது தேசப்பற்றாளராக தலா நூறு ரூபாய் சேகரித்து வருகின்றனர். அனுமதிப் பத்திரங்களை விற்று சம்பாதித்த பணம் எங்கே? அரசாங்கம் கவிழ்ந்த மறுநாள் உதய கம்மன்பில அவுஸ்திரேலியாவில் இருப்பார் என்றார்.

Post a Comment