Header Ads



வீதிகளில் கிரிக்கெட் விளையாடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை - பொலிஸார் எச்சரிக்கை


(Nf) வீதிகளில் கிரிக்கெட் விளையாடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். இன்று 05-03-2014 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண இதனை குறிப்பிட்டுள்ளார்.

வீதிகளில் போக்குவரத்திற்கு தடையை ஏற்படுத்தும் வகையில் விளையாடுபவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார். வீதிகள் வாகனங்கள் பயணிப்பதற்கும் பாதசாரிகள் பயணிப்பதற்கும் மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் விளையாடுவதற்காக, சீமெந்து கலப்பதற்காக, நெல் உள்ளிட்ட தானியங்களை உலர்த்துவதற்கு, வாகனங்களை கழுவுவதற்கு, குளிப்பதற்கு என பல்வேறு தேவைகளுக்காக வீதிகளை பயன்படுத்துவதை அவதானிக்க கூடியதாக உள்ளதென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவை பொலிஸ் கட்டளை சட்டப்படி குற்றச்செயல்களாக கருதப்பட்டு அவற்றுடன் தொடர்புபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான செயற்பாடுகளால் போக்குவரத்து இடையூறுகளும், விபத்துக்களும் இடம்பெறுவதால் அவற்றினை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் அடிப்படையிலேயே வீதியில் கிரிக்கெட் விளையாடிய குற்றத்திற்காக கொழும்பு, கொம்பனி வீதி பகுதியில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

1 comment:

  1. பொது பல சேனா, சிங்கள ராவய போன்ற இயக்கங்களின் இனவாத வீதி ஊர்வலங்கள், கூட்டங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமே.

    ReplyDelete

Powered by Blogger.