''அரசாங்கம்'' ஹக்கீமின் தொண்டையில் சிக்கிய முள்...!
(நவாஸ் சௌபி)
மேல்மாகாண சபைத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் வத்தளை பிரதேசத்தில் வேலேயகொடயில்; ஞாயிற்றுக்கிழமை (09) இரவு நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரசாரக் கூட்டத்தில் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரையினை Jaffna Muslim இல் படிக்க கிடைத்தது.
உணர்ச்சிபூர்வமான அவரது உரையில் வாக்குகளைப் பெறுவதற்கான தந்திரமும் அரசாங்கத்தை எதிர்க்கும் மந்திரமும் நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது. தேர்தலுக்கான பிரச்சாரம் என்றால் யாரையாவது எதிர்த்துப் பேசினால்தான் மக்கள் கைதட்டுவார்கள் என்பதற்காக முன்பின் யோசனை இல்லாமல் அரசாங்கத்தை ஹக்கீம் எதிர்த்துப் பேசுகிறார் என்றுதான் இதனைப் பார்க்க வேண்டியிருக்கின்றது.
ஏனெனில் 'அரசாங்கத்திலிருந்து நீங்குவதானால் ஸ்ரீ.மு.கா கிழக்கு மாகாண சபையில் அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவையும் விலக்கிக் கொள்ள நேரிடும்' என முழக்கமிட்டிருக்கிறார். இதைக் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது இது நடந்தால் இதன் பின்விளைவுகள் எத்தகையது என்பதை விளங்கிக்கொள்ளாத அளவிற்கு ஹக்கீம் அரசியலில் இன்னும் கடைக்குட்டியா?
கிழக்கு மாகாண ஆட்சிக்கு அரசுக்கான ஆதரவை வழங்கியுள்ள நிலையில் இன்று இத்தனை பிரச்சினைகளும் முஸ்;லிம் சமூகத்திற்கு நடந்துகொண்டிருக்கும் போது, இந்த ஆதரவை விலக்கிக்கொண்டால் நமது நிலை என்ன ஆகும் என்பதை கரும்பலகை வைத்தா பாடம் நடத்த வேண்டும்?
கிழக்கு மாகாணசபையில் அரசாங்கத்தின் ஆதரவை விலக்கிக் கொள்வதில், கிழக்கிற்கு வெளியிலுள்ள முஸ்லிம்;களின் இருப்பையும் பாதுகாப்பையும் எவ்வாறு உத்தரவாதப்படுத்த முடியும் என்பதை ஹக்கீம் அரசியலுக்கு அப்பால் சிந்திக்க வேண்டும்.
இன்று சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் இருக்கின்ற முஸ்லிம்களின் இருப்பின் மீதுதான்; பெருத்த அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகின்றது. வடக்கிலோ கிழக்கிலோ சிங்களப் பேரினவாதப் பிரச்சினைகள் பாரதூரமான நிலையில் இல்லை. இந்நிலையில் அரசின் ஆதரவை ஸ்ரீ.மு.கா கிழக்கில் விலக்கிக்கொண்டால் அதன்; மறுதாக்கம்; சிங்களப் பிரதேசங்களில் இன்னும்; எஞ்சியுள்ள பள்ளிகள் தாக்கப்படும், இறைச்சிக்; கடைகள் மூடப்படும், இப்படி ஹபாயுடன் செல்லும் பெண்ணைப் பிடித்திழுப்பார்கள். இதை உருவாக்குவதா இன்றுள்ள அரசியலின் தேவை.
ஏற்கனவே நடந்துகொண்;டிருக்கும் இந்த அடக்குமுறைகளை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என்று தெரியாமல் தடுமாறுகின்ற நிலையில் எரிகின்ற நெருப்பில் இன்னும் எண்ணெயா ஊற்றுவது. இதுதானா ஹக்கீமின் அரசியல் சாணக்கியம்.
அதுவுமில்லாமல் அரசுடன் உள்ள ஆதரவை விலக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்ற அபிப்பிராயத்தினையும் அவர் அங்கு குறிப்பிட்டிருக்;கிறார். இது சட்டிக்குள் இருந்து அடுப்பிற்குள் விழுவது போன்றது. அரசு சிங்கம் என்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலி. என்றோ ஒரு நாள் அதுவும் நம்மை தின்பதுதான்.
அதுமாத்திரமில்லாமல் அரசிலிருந்து விலகி தனித்திருந்தால் வரும் ஆபத்தை விட தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்தால் வருகின்ற ஆபத்து இரட்டிப்பானது. தமிழரும் முஸ்லிம்களும்; சேர்ந்து நாட்டைத் துண்டாடிவிட்டார்கள் என்ற இனவாதப் பிரச்சாரத்தை அரசுடன இணைந்திருக்கின்ற இனவாதக் கட்சிகள் பிரச்சாரம் செய்து நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடுவார்கள். இந்த அவப் பெயரை ஹக்கீம்தான் ஏற்க வேண்டி ஏற்படும்.
இன்றுள்ள அரசாங்கம் பெரும்பான்மை பலம் பெற்ற ஒரு அரசாங்கம் இனவாதத்தை முதலீடாகக் கொண்டு சிங்கள மக்களின் பேராதரவை அது பெற்றிருக்கிறது. இதைப் புரியாமல் 'பிரேமதாசாவை ஜனாதிபதி ஆக்கியவர்கள் நாங்கள் சந்திரிக்காவை ஜனாதிபதி ஆக்கியவர்;கள் நாங்கள்தான். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதி ஆவதானாலும் அதனை நாங்கள்தான் தீர்மானிக்க வேண்டியவர்களாக இருப்போம்;' என்று ஹக்கீம் பிரச்சார மேடையில் மார்;தட்டிப் பேசி இருக்கிறார்.
பிரமதாசா, சந்திரிக்கா ஆகியோரை ஜனாதிபதி ஆக்கிய காலமும் அதற்கான அவசியமும் வேறாக இருந்தது அதனை அஸ்ரப் பயன்படுத்திக்கொண்டார். ஆனால் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆனதில் முஸ்லிம்; வாக்குகளை நாங்கள் கணிசமாக அளிக்கவில்லை என்பதுதான் கடந்த இரண்டு தேர்தல்களிலும் நாம் நிரூபித்த உண்மை. ஹக்கீமும் அவரது கட்சியின் ஆதரவும் இல்லாமல்தானே மஹிந்த எமது கண்;ணுக்;கு முன்;னால் ஜனாதிபதி ஆக வெற்றி பெற்றிருக்கிறார்;. இது இவ்வாறு இருக்க ஹக்கீம் மேடையில் பேசிய கருத்து எதனோடு ஒட்டிய கதை என்று தெரியவில்லை. இன்னும் எதற்கு இந்த வீராப்பான பேச்சு.
18 திருத்தத்திற்கு ஆதரவு வழங்கி அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றதன் ஊடாக மஹிந்தவின் ஆட்சிக்கு முஸ்லிம் சமூகத்தை அடகுவைத்த ஒரு தலைவராக ஹக்கீம் இருக்கிறார். இதனை தான் செய்த ஒரு வரலாற்றுத் துரோகமாக கடந்த வடமேல்மாகாண சபைத் தேர்தலுக்காக புத்தளத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அவரே ஏற்றுக்கொண்டு பேசியும் இருக்கிறார்.
'அதுமாத்திரமன்றி அரசுடன் தான் இணைந்தகொள்ள இருக்கவில்லை கட்சியிலுள்ள சிலர் பின்கதவால் செல்லும் நிலை வந்ததால் இணைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது' என்றும் பிரச்சார மேடைகளில் பேசி வருகிறார். ஒரு ஆளுமை மிக்க தலைவர் இவ்வாறு பேசமாட்டார். ஏனென்றால் ஒரு கட்சி அரசுடன் இணைவதற்கு சமூகத்தைப் பாதுகாக்கும் ஒப்பந்தங்களும் உடன்பாடுகளும்தான் செய்வது வழக்கம் ஆனால் கட்சியிலிருப்பவர்கள் அரசின் பக்கம் பின்கதவால்; செல்வதற்காக அரசுடன் இணைய வேண்டி ஏற்பட்டது என்று மேடைகளில் பேசித் திரிவது அவரது தலைமைத்துவ வறுமையைத்;தான் எடுத்துக் காட்டுகிறது.
மக்களைப் பாதுகாக்காத கட்சியைப் பாதுகாத்து என்ன பயன். பின் கதவால் செல்பவர்கள் செல்லட்டும் கட்சி அவர்களுக்காக அல்ல மக்களுக்காகத்தான் என்று ஹக்கீம் இருந்திருக்க வேண்டும். இப்படி பின்கதவால் சென்றவர்கள் பலரை மக்கள் ஒதுக்கி வைத்திருப்பதும் புரியாத ஒன்றா? ஒரு தலைவர் என்ற வகையில் அரசுடன் இணைந்ததற்கு ஹக்கீம்; கூறும் நியாயங்கள் சிறுபிள்ளைத்தனமானது.
எப்படியோ ஹக்கீமைப் பொறுத்தவரை அரசாங்கம் என்பது தொண்டையில் சிக்கிய முள் போன்றது அதை அவர் துப்பவும் முடியாது விழுங்கவும் முடியாது.

Post a Comment