உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுக்குமா..?

உக்ரைன் நாட்டின் அதிபராக பதவி வகித்த விக்டர் யானுகோவிச்சுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டவர்கள் திடீரென பாராளுமன்றத்தை கைப்பற்றினர். அதிபரை பதவி நீக்கம் செய்ததுடன் மே மாதம் 25-ந்தேதி தேர்தல் நடத்தவும் இடைக்கால அரசு முடிவு செய்துள்ளது.
பதவி இறக்கப்பட்ட விக்டர் யானுகோவிச் ரஷியாவின் ஆதரவாளர். ஆகவே, அவரை காப்பாற்ற ரஷியா ராணுவத்தை அனுப்பலாம் என்று ஒரு யூகம் பரவுகிறது. ஆனால், ராணுவத்தை அனுப்பி உக்ரைன் விவகாரத்தில் தலையிடக் கூடாது என அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
உக்ரைனில் ஏற்பட்டுள்ள உச்சகட்ட பதட்டத்துக்கு மத்தியில், ரஷிய அதிபர் புதின் தனது ராணுவத்தை தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ரஷிய பாதுகாப்பு மந்திரி செர்கெய் சொய்கு வெளியிட்டுள்ள தொலைக்காட்சி செய்தியில், “நாட்டின் ராணுவ பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதால், மிகப்பெரிய அளவில் பயிற்சியில் ஈடுபட புதின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக உயர் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
முதல் இரண்டு நாட்கள் ராணுவம் உஷார்படுத்தப்படுவதுடன், துப்பாக்கி சூடு பயிற்சியும் நடைபெறும். வெள்ளிக்கிழமை முதல் முழுமையான போர் ஒத்திகை நடைபெறும். பால்டிக் கடலில் கப்பற்படை ஒத்திகையும், விமானப்படை ஒத்திகையும் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக எந்த தகவலும் இல்லை. இருப்பினும், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்க திட்டமிட்டிருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது.
Post a Comment