Header Ads



இறைவனின் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கல்விச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி வருகின்றோம்

(ஏ.எல்.ஜனூவர்)

இறைவனின் அருள் கிடைக்கும் என்ற திடமான நம்பிக்கை எம்மிடம் உள்ளதால் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களும் நானும் இணைந்து நமது பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளுக்கு அரசியல் நோக்கமின்றி பணிபுரிந்து வருகின்றோம் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் வித்தியாரம்ப விழா அட்டாளைச்சேனை அறபா வித்தியாலத்தில் பாடசாலையின் அதிபர் ஏ.எல்.எம்.பாயிஸ் தலைமையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நமது பிள்ளைகள் பிறந்தவுடன் முதல் முதலாக தத்தமது வீட்டுச் சூழலில் வாழ்கின்றனர். படிப்படியாக அயல் வீட்டு சூழல், குடும்பங்கள் சார்ந்த சூழல்களை கற்றுக் கொண்டு வாழுகின்றனர். இந்த நிலையில் தனது ஆரம்பக் கல்விக்காக பாடசாலைகளுக்கு சேர்த்துக் கொள்ளும் நமது பிள்ளைகள் புதிய உலகிற்கு ஏற்ற ஆளுமை உள்ளவர்களாகவும், நமது கலாசார விழுமியங்களில் பயிற்றப்பட்டவர்களாகவும், மனித நேயமுள்ள பிள்ளைகளாகவும் மாற்றும் பணியில் நமது ஆசிரியர் சமூகம் பாரிய பங்கினை வகுத்து வருகின்றனர். நமது பிள்ளைகளை அதிபர், ஆசிரியர்களிடம் நாம் பாரம் கொடுத்து நமது பிள்ளைகளின் நடவடிக்கைகளிலும் பாடசாலைகளின் அபிவிருத்தி பணிகளிலும் நாம் கண்ணும் கருத்துமாக இருந்து செயல்படும் போதுதான் நமது பிள்ளைகளின் கல்வியில் ஆர்வம் காட்டி பணிபுரிந்து வரும் அதிபர், ஆரிசியர்கள் மகிழ்ச்சியடைவார்கள். நமது பிள்ளைககளை தங்களின் பிள்ளைகள் என உண்மைக்கு உண்மையாக அன்பு காட்டி நமது பிள்ளைகளின் கல்வி கற்றல் செயற்பாடுகளுக்கு பணிபுரிந்து வரும் ஆசிரியர் சமூத்தை  நாம் என்றும் பாராட்ட வேண்டியுள்ளது.

நமது அக்கரைப்பற்று கல்வி வலயம் பல ஆண்டு காலமாக பௌதீக வளமின்றி பாதிக்கப்பட்டிருந்தது. நமக்கு பௌதீக வளம், ஆசிரியர்கள் பற்றாக்குறைகள் நிலவும் போது தேசிய காங்கிரஸிற்;கு அரசியல் அதிகாரம் கிடைத்ததால் தான் நமது கல்விச் செயற்பாட்டில் வளர்ச்சி கண்டு வருகின்றோம்.

நமது கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை முடிந்தளவு திட்டமிட்டு முறையாக வளர்த்து வருகின்றோம். கல்விச் செயல்பாடுகளுக்கு நாம் தொடர்ந்து உதவி புரிந்து வருகின்றோம். தேர்தல் காலங்களில் மக்கள் எங்களுக்கு வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் கல்வி செயற்பாட்டிற்கான உதவிகள் எப்போதும் எம்மால் வழங்கப்பட்டு வருகின்றன.

நமது பிள்ளைகளின் கல்விக்காக பணிபுரியும் போது இறைவனின் ஆசிர்வாதம் எமக்கு கிடைக்கும்  என்ற நம்பிக்கை உள்ளது. குறிப்பாக  அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலைகளின் வளர்ச்சிக்கு முடிந்தளவு பணி புரிந்து வருகின்றோம். இவ்வாறு நல்ல பணிகள் நாம் மேற்கொண்டு வரும் போது தேர்தல் காலங்களில் பிரதேசவாத, இனவாத உணர்வுகளை தூண்டினால் எல்லாவற்றையும் மறந்து நமது மக்கள் செயல்படுவதும் கவலைப்பட வேண்டியுள்ளது.

நாம் ஒரு போதும் பாடசாலைகளை அரசியலுக்காக பயன்படுத்தவில்லை. நாம் பாடசாலைகளுக்கு உதவி புரிந்து வருவது நமது பிள்ளைகளின் கல்விக்காகவே பல கோடிக்கணக்கான பாடசாலைக் கட்டிடங்களை நாம் கட்டிக் கொடுத்து விட்டு எப்போதாவது ஒரு நாள் மக்களின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் ஒன்றிற்காக ஆராதனை மண்டபத்தினை அதிபர்கள் வழங்குவார்கள் இதனைத் தவிர பாடசாலைகளில் நாம் எப்போதும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.

பாடசாலை கடமைப் பொறுப்பை பாரம் எடுத்து தியாகத்துடன் செயல்படும் அதிபர்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் என்றாலும் எங்களுக்குப் பிரச்சினையில்லை. பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்தி பாடசாலை சமூகம், அரசியல் தலைமைகள், கல்வி அதிகாரிகள் வந்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதன் ஊடாக வளர்ச்சியினை நாம்; காணலாம்.

அறபா வித்தியாலயம் நன்கு திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்யப்பட்ட வேண்டிய நிலைமை நமக்கு ஏற்பட்டுள்ளது. இக் கல்லூரியின் பௌதீக வளங்களில்  தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களும் நானும் முடிந்தளவு உதவி புரிவோம் எமக்கு அரசியல் அதிகாரம் கிடைத்த போதெல்லாம் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி பல பணிகளைப் புரிந்து வருகின்றோம். நாம் செய்கின்ற அபிவிருத்தி பணிகளில் தவறுகள் பிழைகள் இருந்தால் அவைகளைத் திருத்தி தொடர்ந்து அபிவிருத்தி பணிகளை செய்யக் கூடியவாறு மக்களின் வாக்குகளை பெற்று அரசியல் அதிகாரங்களைப் பெற்றுள்ள முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் நாம் வழி கொடுத்துள்ளோம். எனவே நமது மக்களுக்கு  வரலாற்று அபிவிருத்தி பணிகளை நாம் திட்டமிட்டு செயல்படுத்தி வரும் போது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக தவறான தகவல்களை சிலர்  தெரிவித்து வருவது கவலைப்பட வேண்டியதாக உள்ளது.

எங்களுக்கு கிடைத்துள்ள அரசியல் அதிகாரத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின மக்களுக்கு நல்ல பணிகளை புரிந்து வருகின்றோம். விசேடமாக அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை நாம் செயல்படுத்தி வருகின்றோம்.

அறபா வித்தியாலயத்திற்கு புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அதிபர் பாயிஸ்; நல்ல அனுபவம் ஆளுமை உள்ள அதிபராகும். இக்கல்லூரியின் பழைய மாணவர்கள் பல பேர் உயர்ந்த பதவிகளில் உள்ளனர் தனது ஆரம்பக்கல்வியை இக் கல்லூரியில் கற்று உயர்ந்தவர்கள் இக்கல்லூரியின் வளர்ச்சியில் தொடர்ந்தும் ஈடுபாடு உள்ளவர்களாகவும் இக் கல்லூரியை உயர்ந்த இடத்தில் கொண்டு செல்கின்ற இலட்சியத்தோடு செயற்படுகின்றனர் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்சில், அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.ஏல்.காசீம், அட்டாளைச்சேனை கோட்டக்கல்விப் பணிப்பாளர், எம்.ஏ.சி.கஸ்ஸாலி, அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் உட்பட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.