Header Ads



ஆசிரியர் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான மலைப்பாம்புகள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் புறநகர்ப் பகுதியான சாண்டா ஆனாவில் வில்லியம் புச்மன்(53) என்பவர் வாழ்ந்து வருகின்றார். இவர் அங்குள்ள நியுபோர்ட் மாவட்ட மெசா யூனிபைட் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகின்றார். 

இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டை நேற்று காவல்துறையினர் சோதனையிடச் சென்றனர். 

ஐந்து அறைகள் கொண்ட புச்மனின் வீட்டைத் திறக்க சொல்லி பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சியில் உறைந்தே போயினர். அங்கு அவர்கள் நூற்றுகணக்கான மலைப்பாம்புகள் பிளாஸ்டிக் பெட்டிகளில் நெருக்கமாக அடைக்கப்பட்டு நான்கு அறைகள் முழுவதும் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்தனர்.

இவற்றில் பல பாம்புகள் இறந்தும் கிடந்துள்ளன. ரொம்ப நாளாக இறந்து போன பாம்புகளிலிருந்து சமீபத்தில் இறந்தது வரையிலான பாம்புகளைக் காவல்துறையினர் அங்கிருந்த பெட்டிகளில் பார்த்தனர். 

தரையிலிருந்து மேற்கூரை வரை நெருக்கமாக அடைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் இருந்த பாம்புகளின் வகைகள் மற்றும் விபரங்கள் கொண்ட குறிப்புகளும் ஒவ்வொரு பெட்டியிலும் இருந்துள்ளன. 

மேலும் வீடு முழுவதும் எலிகளும், சுண்டெலிகளும் நிறைந்து காணப்பட்டுள்ளன. சில பிளாஸ்டிக் தொட்டிகளில் வைக்கப்பட்டிருந்த இந்த எலிகள் ஒன்றுடன் ஒன்று கடித்துக் குதறிக்கொண்டிருந்தன என்று அங்கு சென்ற சாண்டா ஆனா காவல்துறையின் விலங்குகள் சேவை பிரிவின் மேற்பார்வையாளரான சோன்ட்ரா பெர்க் தெரிவித்தார். திகில் வீடு என்று இதைக் குறிப்பிடுவதே சிறந்த வழியாகும் என்று அவர் விவரித்தார். 

சுவாசக் கருவி முகமூடிகள் அணிந்துகொண்டு மீட்புப் படையினர் அங்கிருந்த 400க்கும் மேற்பட்ட பாம்புகளை வெளிக்கொண்டு வந்தனர். துர்நாற்றம் போகவேண்டுமென்றால் தான் ஒரு வாரம் குளிக்கவேண்டும் என்று இந்தப் பணியில் ஈடுபட்ட காவல்துறை வீரரான அந்தோணி பெர்டக்னா கூறினார். அந்த அளவிற்கு அந்த வீடு முழுவதும் பாம்புகள் நிறைந்திருந்தது என்று அவர் குறிப்பிட்டார். 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வில்லியம் புச்மன் கைது செய்யப்பட்டு காவல்துறையின் கண்காணிப்பில் உள்ளார். அவரது கைது குறித்து அவர் வேலை செய்துவந்த பள்ளி நிர்வாகம் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. 

புச்மனும் தான் ஒரு பாம்புகள் இனப்பெருக்க நிறுவனத்துடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். இவர் மீது இன்னும் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இவருடன் வசித்துவந்த இவரது தாயார் சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார் என்றும் புச்மன் தனியாகத்தான் இந்த வீட்டில் வசித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. most of the americans are mad... only sowing to public there opposite side

    ReplyDelete

Powered by Blogger.