Header Ads



''கிழக்கின் வாழும் மூவீன மக்கள் மத்தியில் நிரந்தரமான இன உறவுகளை வளர்க்க வேண்டும்''

(ஏ.எல்.ஜனூவர்)

கிழக்கின் மூவின மக்கள் வாழும் பிரதேசங்களில் கடந்த 05 வருடகாலமாக கிழக்கு மாகாண வீதி  அவிவிருத்தி அமைச்சினால் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் கிழக்கில் வாழும் மூவின மக்கள் மத்தியில் இன உறவுகளை எமது அமைச்சின் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஊடாக வளர்த்து வருவதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும், கிழக்கு மாகாண அமைச்சரவை பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தனது அமைச்சின் வரவு செலவுத்திட்ட உரையின் போது குறிப்பிட்டார். 

கிழக்கில் கடந்த 30 வருட காலமாக யுத்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அடையாளம் கண்டு மூன்று மாவட்டங்களிலும் சுமார் 700km நீளமுள்ள வீதிகள் எமது அமைச்சினால் அமைக்கப்பட்டு கட்டம் கட்டமாக மக்கள் பாவனைக்காக கையளித்து வருகின்றோம். கிழக்கு மாகாணம் தனியாக பிரிக்கப்பட்ட பின் சென்ற 2008ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் கிழக்கு மாகாண நிருவாகத்தை பொறுப்பேற்ற போது மக்கள் பிரதிநிதிகளுக்கு மாகாண சபையில் எவ்வித அதிகாரமும் இல்லை எனத் தெரிவித்தனர். வட-கிழக்கு  இணைந்த மாகாண சபை நிருவாகம் செயற்பட்டபோது நிலைமை எப்படி இருந்தன என்பதனை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். கடந்த 05 வருட காலமாக  கிழக்கு மாகாணத்தின் மக்கள் பிரதிநிதிகளின் அபிலாஷைகளுக்கு ஏற்றவாறு மாகாண சபையை செயற்பட நாம் தியாக மனப்பாங்குடன் செயற்பட்டு கிழக்கு மாகாண சபை மீது மக்கள் நம்பிக்கை வைக்கக் கூடிய  வகையில் மாற்றியுள்ளோம்.

இந்த நடவடிக்கைகளுக்காக பணிபுரிந்த மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் அனைவருக்கும் நான் நன்றி கூறுகின்றேன். கடந்த 2008ம் ஆண்டு வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சை நான் பாரமெடுத்த போது நிருவாகம் சீர்குலைந்து இருந்தன. மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளுக்கு  ஏற்றவாறு பணிபுரிய பல அதிகாரிகள் அன்று மறுப்புத் தெரிவித்தனர். ஆனால் 05 வருடங்களுக்கு பின் 80மூ மான மக்கள் பிரதிநிதிகளின்; கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி சிறப்பான பணிகளை நாம் வழங்கி வருகின்றோம். எனது அமைச்சின் வரவு-செலவுத்திட்ட விவாதத்தில் 29 உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து உரையாற்றியமை உண்மையில் கிழக்கு மாகாண சபையின் வரலாற்றில் பதியப்பட வேண்டிய விடயமாகும்.

நமது மக்கள் பிரதிநிதிகள் எந்தக்கட்சியாக இருந்தாலும் அவர்களது கருத்துக்களை தெரிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும். எனது அமைச்சின் நடவடிக்கைகள் தொடர்பாக பாராட்டு தெரிவித்த கௌரவ உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எமது அமைச்சின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக  கௌரவ உறுப்பினர்கள் தெரிவித்த ஆலோசனைகளை எதிர்காலத்தில் கவனத்தில் எடுத்து செயற்படவுள்ளோம் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.

சபையில் உரையாற்றிய சபை உறுப்பினர் எம்.ராஜேஸ்வரன் அம்பாறை மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளில் தமிழ் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். இதனைக் கேட்டு மிகவும் மனம் வருந்துகின்றேன். எனக்கு கிடைத்துள்ள இந்த அமைச்சு பதவி ஊடாக அபிவிருத்தி நடவடிக்கைகள் மாத்திரம் மேற்கொள்ளாது கிழக்கின் வாழும் மூவீன மக்கள் மத்தியில் நிரந்தரமான இன உறவுகளை வளர்க்க வேண்டும் என தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், மாண்புமிகு உள்ளுராட்சி,மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் கனவாகும். இந்த வழிகாட்டலில் கிழக்கு மாகாணத்தில் நாம் சிறந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். எமது அமைச்சின் எல்லா நிதிகளும் முடிந்தளவு மூன்று மாவட்டத்தில் வாழும் மூவின மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் நாம் செயற்பட்டு வருகின்றோம். அம்பாறை மாவட்டத்தில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, காரைதீவு, கல்முனை தமிழ் பிரிவு, நாவிதன்வெளி, பொத்துவில் பிரதேசங்களை சேர்ந்த தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக எமது அமைச்சின் நிதி 600 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

திராய்க்கேணி, தங்கவேலாயுதபுரம், இன்ஸ்பெக்டர் ஏத்தம், ஆலையடிவேம்பு ஆகிய கிராமங்களின் அபிவிருத்திக்கும்  நாம் உதவி செய்து வருகின்றோம். நாவிதன்வெளி பிரதேசத்தை துஐஊயு திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு சிபாரிசு செய்யப்ட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வீதி, நீர்ப்பாசனம், நீர்வழங்கல் திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளது. மட்டக்களப்பு திருமலை மாவட்டங்களின் தமிழ் பிரதேசங்களுக்கு முடியுமான வரை எமது அமைச்சின்  நிதி ஒதுக்கீட்டின் மூலம் வரலாற்று அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். குறிப்பாக நீலப்பணிச்சங்குளப் பிரதேசத்தில் தமிழ் மக்களின் விவசாயக் காணிகளை மீட்டுக் கொடுத்து பாரிய நிதியினை ஒதுக்கி நீலப்பணிச்சங் குளத்தை அபிவிருத்தி செய்துள்ளதுடன், மூதூர் லங்காபட்டண வீதிக்கு 500 மில்லியன் ஒதுக்கப்பட்டதுடன் திருமலை தென்னமரவாடிக் கிராம வீதிக்காகவும் 225 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தை,கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. எனது அமைச்சின் விவாதம் முடிந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான நஸீர்,தவம் அட்டாளைச்சேனை கோணாவத்தை வடிச்சல் திட்டத்தை உடனடியாக நிறுத்துவதாக வாக்குறுதியளிக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது குறித்து மிகவும் கவலைப்படுகின்றேன். 

அட்டாளைச்சேனை கோணவத்தை வடிச்சல் திட்டம் சுமார் 8500 நெற்காணிகளின் வடிச்சல் திட்டமாகும். இயற்கையான கோணவத்தை ஆறு இருந்தமையினால்தான் சுனாமியின் போது அட்டாளைச்சேனை மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டன. கோணாவத்தை ஆறு இல்லை என்றால் பெரும் உயிர்;ச்சேதம் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும். இயற்கையான நீர்ப்பாசன திட்டங்களான ஆறு, குளங்கள் பாதுகாகக்கப்பட வேண்டிய பொறுப்பு எனக்குள்ளது. இந்த விடயத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

கோணாவத்தை இரு கரைகளிலும் வாழும் மக்கள் ஆதரவுடன் மத்திய நீர்ப்பாசன அதிகாரிகள், மாகாண நீர்ப்பாசன அதிகாரிகள், கரையோரப் பாதுபாப்பு பணியகப் பணிப்பாளர்,சுற்றாடல் அதிகார சபை, பிரதேச செயலாளர், கோணாவத்தை அபிவிருத்தி குழு, விவசாயக் குழு என்பன இவ்வடிச்சல் திட்டத்தினை மேற்கொண்டு வருகின்றன. இப்பிரதேச வடிச்சல் திட்டம், வாழ்வாதாரம், மீன்பிடித்துறை வளர்ச்சி, படகுச்சேவை போன்ற துறைகள் பாரிய வளர்ச்சி ஏற்படக்கூடிய திட்டம் நீர்ப்பாசன வாரத்தில் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை இடைநிறுத்துமாறு எனது அமைச்சின் வாக்கெடுப்பு நடக்க இருக்கும் இறுதி நேரத்தில் நிபந்தனை விதிப்பதனை என்னால் ஏற்கொள்ள முடியாது. கோணவத்தை வடிச்சல் திட்டத்தினை இடைநிறுத்தி எனது அமைச்சின் வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதினை விட எமது அமைச்சின் வாக்கெடுப்பில் தோல்வியடைந்து எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்வதற்கு நான் தயாராக உள்ளேன். 

கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் 07 உறுப்பினர்கள் உள்ள போதிலும் கௌரவ உறுப்பினர் ஹஸன் மௌலவி சுகவீனம் காரணமாக விடுமுறையில் உள்ளார். தற்போது 06 உறுப்பினர்களே சமூகம் கொடுக்கின்றனர். கிழக்கு மாகாண சபையில் தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் 03 பேரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 03 பேரும், இணைந்து 06 உறுப்பினர்கள் உள்ளோம் என்பதினை சிலர் மறந்து செயற்படுகின்றனர்.

அமைச்சின் வாக்கெடுப்பு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நமது எதிர்கால சந்ததியினரின் பொருளாதார, வாழ்வாதார வளர்ச்சிக்கு உதவும் கோணாவத்தை வடிச்சல் திட்டத்தினை நிறுத்த முடியாது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு தினத்தை ஒதுக்கி இந்த வடிச்சல் திட்டத்தினை பார்வையிடுவதற்கு வருகை தர வேண்டும் என அன்புடன் அழைக்கின்றேன். கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் இதுவரை கிழக்கு மாகாணத்தில் 700km வீதிகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. JICA திட்டத்தின் கீழ் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட 320km வீதியும், அம்பாறை மாவட்டத்தில் UNOPS நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்டு பராமரிப்பு இல்லாத சுமார் 420km வீதியும், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் பாரம் எடுப்பதற்கு விசேட அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளேன். 

எமது அமைச்சின் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு உதவி புரிந்த அனைவருக்கும் எனது நன்றியினை  தெரிவிக்கின்றேன்.

No comments

Powered by Blogger.