Header Ads



கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் விளக்கம்..!

பத்திரிகை ஆசிரியர்,
யாழ்ப்பாண முஸ்லிம் (இணையம்)

யாழ் முஸ்லிம்  இணையத்தளத்தில் வெளியான செய்தி தொடர்பான அறிக்கை

கிழக்கு மாகாணத்தின் ஆயுர்வேத மருத்துவத்துறை ஒன்று ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமாக அபிவிருத்தி அடைந்து வருகின்றது. குறைந்த வளங்களைக் கொண்டு தன்னிறைவான சேவையினை மக்களுக்கு வழங்கி வருகின்றது. இருந்த போதிலும் 1.12.2013 அன்று யாழ்ப்பாண முஸ்லிம்  இணையத்தளத்தில் வெளியான செய்தியானது பிழையானதும் ஆயுர்வேத மருத்துவத் துறையினை மலினப்படுத்துவதாகவும் உள்ளது.

அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதியிலிருந்து தற்காலிக கட்டடங்களில் இயங்கிவந்த ஆயுர்வேத வைத்தியசாலைகள் நிரந்தரக் கட்டடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன்,தற்காலிகமாக பணியாற்றிய ஆளணியினர் நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயுர்வேத மருந்துக் கொள்வனவுக்காக ஒதுக்கப்பட்ட பணத்திலிருந்து மருந்துத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் கிழக்கு மாகாணத்தில் இயங்கிவரும் ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு மருந்துகள் வினியோகிக்கப்படுகிறது. வருடாந்தம் 33 மில்லியன் மருந்துகளை வைத்தியசாலைகளுக்கு எமது திணைக்களத்தால் விநியோகிப்பதோடு அதற்கான ஆதாரங்கள் எம்மிடம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.  எனினும் வைத்தியர்களின் முக்கிய நோக்கம் நோய்களை முற்றாகக் குணப்படுத்துவதாகும். இச்சந்தர்ப்பத்தில் சில அனுபானங்களையோ அல்லது வைத்தியசாலைகளில் இல்லாத ஆயுர்வேத மருந்துகளை (Indian medicines) வெளிமருந்தகங்களில் பெறவேண்டியது தவிர்க்கமுடியாதுள்ளது.

ஆயுர்வேத மருந்துப் பற்றாக்குறை மருத்துவர்களிடம் நிலவும் குறைபாடுகளை ஆராய்வதற்காக திருகோணமலை மட்டக்களப்பு கல்முனை அம்பாறை மாவட்டங்களில் எமது திணைக்களத்தால் மாதாந்த மீளாய்வுக் கூட்டங்களை நடத்திவருவதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் கிழக்கு மாகாணத்தில் இயங்கும் ஆயுர்வேத வைத்தியசாலைகளில் எமது திணைக்களத்தால் திடீர் கண்காணிப்புக்களை மேற்கொள்வதுடன் அக்கண்காணிப்பு நடவடிக்கைகளில் கிழக்கு மாகாணக் குழுவும் இணைந்து மேற்கொண்டு வருகின்றது.

அரச வைத்தியத்துறையில் பணியாற்றும் ஆயுர்வேத வைத்தியர்கள் தனியார் மருத்துவ மனைகளை நடத்திவருவதனை ஒழுங்குபடுத்துவதற்காக குழுவொன்று எமது திணைக்களத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனூடாக வைத்தியர்களின் சேவை ஒழுங்கு படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சில குறைபாடுகள் காணப்பட்ட போதிலும் கிழக்கு மாகாண கௌரவ சுகாதார  அமைச்சர் அவர்கள், செயலாளர், ஆயுர்வேத பணிப்பாளர்;, மற்றும் துறைசார் வல்லுனர்களின்  ஆலோசனைகளின்படி எமது ஆயுர்வேதத் துறையை மேம்படுத்தும் சந்தர்ப்பங்கள் இருந்தபோதும் பத்திரிகையூடாக வெளியாகும் மேற்படி பிழையான தகவல்கள் எமக்கு மனவேதனையை அளிக்கின்றது என்பதனை அறியத்தருகின்றேன். 

வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர்
மாகாண ஆணையாளர்
சுதேச மருத்துவத் திணைக்களம்
கிழக்கு மாகாணம்.

No comments

Powered by Blogger.