அண்ணன் தம்பி பாசம் - அக்கரைப்பற்றில் இருவரது உயிர் போனது
(tm) அக்கரைப்பற்று பனங்காடு பாலத்தின் கீழுள்ள வாவியில் மூழ்கி சகோதரர்கள் இருவர் நேற்று சனிக்கிழமை மாலை உயிரிழந்துள்ளனர்.
வாவியினுள் வீழ்ந்த தலைக் கவசத்தை எடுப்பதற்காக வாவியில் இறங்கிய தம்பியை காப்பாற்ற முற்பட்டபோதே அண்ணனும் தம்பியும் வாவியில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
ஆலையடிவேம்பு நாவற்காட்டு கோபால்கடை வீதியை சேர்ந்த் 24 வயதுதுடைய ஞானசேகரம் ஜனார்த்தன் மற்றும் 21 வயதுடைய தினேஸ் என அழைக்கப்படும் ஞானசேகரம் ஜெயந்திவாசன் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
பாலத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது தலைக்கவசம் வாவியில் வீழ்ந்துள்ளது. இதனையடுத்து தம்பியார் வாவியில் குதித்து தலைக்கவசத்தை எடுக்கமுற்பட்டுள்ளார். இதனை அவதானித்த அண்ணன் தம்பியை காப்பாற்ற வாவியில் குதித்துள்ளார். இதனால் இரண்டு பேரும் நீரில் மூழ்கியுள்ளனர்.
மீனவர்களின் உதவியுடன் தம்பி மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்வழியில் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் தம்பியை காப்பாற்ற வாவியில் குதித்த அண்ணன் காணாமல் போயுள்ள நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் சடலமாக பாலத்துக்கு அருகாமையில் மீட்கப்பட்டார்.
சம்பவத்தில் உயிரிழந்த இருவரது சடலமும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ள. இது தொடர்பான விசாரனைகளை அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
.jpg)
Post a Comment