Header Ads



மன்னார், நானாட்டான் பொண்தீவுக் கண்டல், பூவரசங்குளம் கிராம அரச காணிப் பகிர்வு தொடர்பான கலந்துரையாடல்


மன்னார், நானாட்டான் பொண்தீவுக் கண்டல் மற்றும் பூவரசங்குளம் கிராம அரச காணிப் பகிர்வு தொடர்பான கலந்துரையாடல் (8.11.2013) வெள்ளிக்கிழமை காலை நானாட்டான் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நானாட்டான் பிரதேச செயலாளர் திரு சீ.வி.சந்திரஐயா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற  இந்நிகழ்விற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வட மாகாணசபை உறுப்பினர்களான சிராய்வா, அய்யூப் அஸ்மின், ஞா.குணசீலன், றிப்கான் பதியுதீன், அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் அவர்களின் இணைப்புச் செயலாளர் ஜனாப். அலிகான், பூவரசங்குளம் மக்கள் பிரதிநிதிகள், பொண்தீவுக் கண்டல் மக்கள் பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது நானாட்டான் பிரதேச செயலாளர் திரு சீ.வி.சந்திரஐயா அவர்கள் கருத்துத் தெரிவித்தபோது,

'பூவரசங்குளம் மற்றும் பொண்தீவுக் கண்டல் கிராமங்கள் இரண்டும் ஒரே கிராம சேவையாளர் பிரிவாக அடையாளப்படுத்தப்படும் பல்லின சமூகத்தவர் வாழும் கிராமமாகும். இங்கு 122 முஸ்லிம் குடும்பங்களும், 98 கத்தோலிக்க குடும்பங்களும் 15 இந்துக்குடும்பங்களுமாக மொத்தம் 235 குடும்பங்கள் வசிக்கின்றார்கள். இவர்களில் 1990களில் வெளியேறிய இஸ்லாமிய சகோதரர்கள் மீளக்குடியமர்வதற்காக 2005 முதல் காணிகளற்ற 96 குடும்பங்கள் அரச காணிக்காக விண்ணப்பித்திருந்தனர்.  2010 முதல் பல்வேறு கலந்துரையாடல்களின் பின்னர் குறித்த பொண்தீவுக்கண்டல் மேட்டுக்காணியினை இரு சாராருக்கும் பகிர்ந்தளித்தல் என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு சந்தர்ப்பங்களில் காணி அளவை செய்யப்பட்டு, இறுதியாக 21.10.2013 அன்று 55 முஸ்லிம் குடும்பங்களுக்கும் 37 கிறிஸ்த்தவக் குடும்பங்களுக்குமாக காணிகள் அடையாளப்படுத்தப்பட்டன. இதில் முஸ்லிம் குடும்பங்கள் ஒரு சிலவற்று இந்திய வீட்டுத்திட்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதால் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட  காணிகளில் அவர்கள் வீடுகளை நிர்மானிக்கும் பணிகளின் ஈடுபட்டுமுள்ளனர். இந்நிலையில் பொண்தீவுக் கண்டல் மக்கள் இது தம்முடைய பூர்வீகப் பிரதேசம் என்றும் இதில் முஸ்லிம்கள் குடியேறக் கூடாது என்றும் கூறி கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர், இதனைத் தொடர்ந்தும் கட்டுமானப்பணிகளின் ஈடுவதை இடைநிறுத்தி, அங்கிருக்கும் கட்டிடப்பொருட்களுக்கு பாதுகாப்பாகவும் ஏனைய அத்துமீறல்கள் இடம்பெறாது தடுக்கவும் பொலிஸாரை நாம் கடமையில் ஈடுபடுத்தியிருக்கின்றோம். எனவே இரு சமூகத்தவரும் இணைந்து ஒரு இணக்கப்பாடான தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு தங்கள் அனைவரையும் இவ்விடத்தில் நான் அழைத்திருக்கின்றேன். நிலைமைகளை சீராக ஆராய்ந்து ஒரு நல்ல தீர்வுக்கு வரவேண்டிய தங்களது பொறுப்பாகும்.' என்று குறிப்பிட்டார்.

'பொண்தீவுக் கண்டல் மக்கள் சார்பாக பேசிய கத்தோலிக்க சமூகப் பிரதிநிதிகள் குறித்த காணி தங்களது பூர்வீகக் காணி என்றும் அதில் தமக்கான அதிர்ஷ்டப் பட்சி இருப்பதாக ஒரு ஐதீகம் இருப்பதால் குறித்த காணியை நாம் எமது உயிரிலும் மேலாக மதிக்கின்றோம் இதனை ஒரு போது விட்டுத்தர முடியாது என உறுதிபடத்தெரிவித்ததோடு. தமக்கும் பூவரசங்குளம் முஸ்லிம்களுக்கும் எவ்வித பிரச்சினைகளும் கிடையாது நாம் நல்லிணக்கமாகவே வாழ விரும்புகின்றோம்' எனவும் அவர் தெரிவித்தனர்.

'பூவரசங்குளம் கிராமிய மக்கள் சார்பாகவும், குறித்த காணி பூவரங்குளம் கிராமத்தின் எல்லைக் காணி என்றும் புளவு காணி என்றும் இதில் எமக்கும் பூர்வீக உரித்து இருக்கின்றது' என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பல்வேறு வகையான கருத்துக்கள் இந்த கலந்துரையாடலின்போது முன்வைக்கப்பட்ட போதிலும் குறித்த விடயம் தொடர்பாக இரு தரப்பினரிடையேயும் விரிவாக கலந்துரையாடிய பின்னர் எதிர்வரும் புதன்கிழமை 13.11.2013 அன்று இறுதித்தீர்வு பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.


No comments

Powered by Blogger.