தந்தையை பற்றி அவதூறு பேசியவரை அடித்துக்கொன்ற மகன்
(adt) ஆணமடு நகரில் ஒருவர், இரும்புப் பொல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு 10.00 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், ஆணமடு சிலாபம் வீதியைச் சேர்ந்த 53 வயதான வர்த்தகர் ஒருவரே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவரின் வர்த்தக நிலையத்துக்கு அருகில், கொலை செய்ததாக கருதப்படும் சந்தேகநபரின் தந்தையும் தொழில் செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் சந்தேகநபரின் தந்தை கஞ்சா பாவிப்பதாக கொலை செய்யப்பட்ட வர்த்தகர் மற்றொருவரிடம் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை குறித்து பேச சந்தேகநபர் கொலையுண்ட வர்த்தரின் வர்த்தக நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆரம்பத்தில் சுமூகமாக ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தை பின்னர் மோதலாக வெடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சந்தேகநபர் வர்த்தகரை இரும்புப் பொல்லால் தாக்கியுள்ளதாக தெரிகிறது. சம்பவத்தில் படுகாயமடைந்த வர்த்தகர் ஆணமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின் உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன. இதேவேளை சந்தேகநபர் ஆணமடு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
.jpg)
Post a Comment