Header Ads



பயங்கரவாத செயற்பாடுகளுக்கு மனித உரிமை மீறல் என்று அர்த்தம் கற்பிக்க வேண்டாம் - பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்

வவுனியா சிறைச்சாலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதலையடுத்து தாக்கப்பட்டு உயிரிழந்த தமிழ்க் கைதி நிமலரூபனின் பெற்றோர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கினை உயர்நீதிமன்றம் 14-10-2013 இன்று தள்ளுபடி செய்தது.

மேற்படி அடிப்படை உரிமை மீறல் மனு, இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, நிமலரூபனின் மரணத்திற்கான காரணங்களை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.

அத்துடன், உயிரிழந்த நிமலரூபனின் உடலில் 20க்கும் மேற்பட்ட காயங்கள் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இதற்கு விளக்கமளித்த பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரமொன்றை அடக்கும் போது இவ்வாறான மரணங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்று கூறினார்.

இவ்வாறான பயங்கரவாத செயற்பாடுகளுக்கு மனித உரிமை மீறல் என்று அர்த்தம் கற்பிக்க வேண்டாம் என்றும் தெரிவித்த பிரதம நீதியரசர், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிக்கும்போது இவ்வாறான மரணங்கள் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார். 

இவ்வாறான வழக்குகளை தொடர்ந்தும் விசாரிப்பதன் மூலம், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றும் பிரதம நீதியரசர் குறிப்பிட்டார். 

எனவே, குறித்த மனுவை தொடர்ந்தும் விசாரிப்பதற்கு நியாயமான காரணங்கள் இல்லை என்று தெரிவித்த பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழு, இந்த வழக்கை தள்ளுபடி செய்தது. bbc

No comments

Powered by Blogger.