அரசாங்கத்தை கவிழ்க்கும் செயலையே ரவூப் ஹக்கீம் செய்கிறார் - முசம்மில்
(Vi) தமிழ் ஈழத்தினை உருவாக்கும் நோக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இரு வேறு கொள்கைகளில் செயற்படுகின்றனர். அரசாங்கத்தையும், முஸ்லிம்களையும் ஆதரிப்பது போல் விக்னேஸ்வரனும் அரசாங்கத்தை எதிர்ப்பது போல் சிவாஜிலிங்கமும் நாடகமாடி சாதிக்கவே முயல்கின்றனர் என்று தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் சபைத் தலைவர் மொஹமட் முசம்மில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கருத்துக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கும் வகையிலேயே உள்ளது. இரு கட்சிகளும் இணைந்து நாட்டில் மீண்டுமொரு யுத்தத்தினை உருவாக்கப்பார்க்கின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் இரண்டு விதமான கொள்கைகள் காணப்படுகின்றன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் எவ்வாறு சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை தவிர்த்து வடக்கில் தனித் தமிழர்களின் பூமியாக மாற்ற முயற்சித்தாரோ அதே கொள்கையில் இன்று கூட்டமைப்பிற்குள் இருக்கும் சிவாஜிலிங்கம், சுரேஸ் பிரேமசந்திரன் போன்றோர் தீவிரமாக செயற்படுகின்றனர்.
மறுபுறம் அரசாங்கத்தையும் முஸ்லிம் மக்களையும் பகைத்துக்கொள்ளாத வகையில் ஜனநாயக ரீதியில் செயற்படுவதாக நாடகமாடி தனது சூழ்ச்சிகளினால் வடக்கில் தனி ஆட்சியினை உருவாக்க விக்னேஸ்வரன், சம்பந்தன் போன்றோர் செயற்பட்டு வருகின்றனர்.
இவ் இரு கொள்கைகளினதும் இறுதி நோக்கம் தனித் தமிழ் ஈழம் மட்டுமே. இதனை அடைந்து கொள்வதற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செயற்பட்டு வருகின்றனர்.
மேலும் இன்று அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தை கவிழ்க்கும் செயலையே ரவூப் ஹக்கீம் செய்து வருகின்றார். அரச பதவிகளையும் சுகபோக வாழ்க்கையினையும் அனுபவித்துக்கொண்டு மறைமுகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்.
ஆரம்பத்தில் இருந்தே அரசாங்கத்துடன் இணைந்து வந்திருந்தால் ஜனாதிபதியின் கொள்கைகளும் செயற்பாடுகளும் ஹக்கீமிற்கு தெரிந்திருக்கும். இடையில் வந்து அரசுடன் ஒட்டிக்கொண்டதனால் ஒரு நிலையான கொள்கை அவரிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
.jpg)
Post a Comment